பேட்மிண்டன் தொடர்
மிகவும் பழமை வாய்ந்த ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர், பெர்மிங்கமில் இன்று தொடங்குகிறது. மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டி வருகிற 21-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் 3 நாடுகளை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது யாராலும் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் இந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் மீண்டும் பரிசோதனை செய்யப்படும் என்றும் உலக பேட்மிண்டன் ஃபெடரேஷன் அறிவித்துள்ளது.
பயிற்சியாளர் கேள்வி
இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணி பயிற்சியாளார் மேத்தீவ்ஸ் போயி, இந்திய வீரர்கள் கொரோனா ஏற்பட வாய்ப்பே இல்லை. நாங்கள் ஸ்விஸ் ஓபன் தொடருக்கு பின்னர் 2 வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டோம். 14 நாட்களில் 5 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நெகட்டிவ் என வந்தது. ஆனால் தற்போது மட்டும் எப்படி உறுதியாக வாய்ப்பு உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்யப்
உறுதி செய்யப்பட்ட 3 வீரர்களின் விவரம் வெளியிடப்படாத நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர் பருப்பல்லி காஷ்யப்பும் ஒருவர் என கூறப்படுகிறது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், இது என்ன வகையான பரிசோதனை? பரிசோதனை செய்து 31 மணி நேரங்களை கடந்தது. ஆனால் இன்னும் ஒரு முடிவு எட்டப்படவில்லை, மறு பரிசோதனை செய்யவுள்ளார்கள், போட்டி எப்போது தொடங்கும் என்பது அந்த கடவுளுக்கு தான் தெரியும் என தெரிவித்துள்ளார்.
நேவால்
இதே போல் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய பேட்மிண்டன் வீராங்கனையும், பருப்பள்ளி காஷ்யப்பின் மனைவியுமான சாய்னா நேவால், கொரோனா பரிசோதனை செய்து 30 மணி நேரத்தை கடந்துள்ளது. ஆனால் இன்னும் ஒரு முடிவு தரவில்லை. 2 நாட்களாக பயிற்சி மற்றும் ஜிம்மிற்கு செல்ல முடியவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சிறந்த வாய்ப்பு
கொரோனா பிரச்சினை காரணமாகவும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றாக இதன் முடிவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்பதாலும் சீனா, கொரியா, தைபேவை சேர்ந்த முக்கிய வீரர்கள் பலரும் இந்த போட்டியில் இருந்து ஒதுங்கி உள்ளனர். இதனால் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் வெல்ல சரியான தருணமாக பார்க்கப்படுகிறது.