ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம்
பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் மிகச்சிறந்த வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார். ரியோ ஒலிம்பிக்கில் இவர் தனிநபர் பிரிவில் விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை 5 முறை வென்றவர் இவர்.
பட்டத்தை வென்ற பிவி சிந்து
இந்நிலையில் பிபிசியின் இந்திய விளையாட்டு விராங்கனை 2019 விருதினை பிவி சிந்து பெற்றுள்ளார். சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சிந்துவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை தன்னுடைய ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அர்ப்பணிப்பதாக சிந்துதெரிவித்துள்ளார்.
இளம் வீராங்கனைகளுக்கு அட்வைஸ்
இந்த விருதினை பெற்றுக்கொண்ட பிவி சிந்து, இளம் வீராங்கனைகள் முதலில் தங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். கடுமையான உழைப்பே வெற்றியை நோக்கி நம்மை அழைத்து செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது பேச்சு வளர்ந்துவரும் வீராங்கனைகளுக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருந்தது.
அதிக பதக்கங்கள்
எதிர்காலங்களில் அதிகமான வீராங்கனைகள் விளையாட்டுத்துறையில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்கள் நாட்டிற்காக அதிகமான பதக்கங்களை வெற்றி கொள்வார்கள் என்றும் சிந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பிபிசி இயக்குநர் டோனி ஹால் சிந்துவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
பி.டி.உஷாவிற்கு விருது
இதனிடையே பிபிசியின் வாழ்நாள் சாதனையாளர் விருதினை முன்னாள் வீராங்கனை பி.டி.உஷா பெற்றுள்ளார். இந்திய விளையாட்டிற்காக உஷா செய்த பங்களிப்பு மற்றும் இளம் வீரர்களுக்கு உந்துதலாக இருந்ததற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது. தங்கள் காலத்தில் பயிற்சிக்கான களங்கள் இல்லை என்று தெரிவித்த உஷா, தற்போது விளையாட்டுத்துறை அதிகளவில் முன்னேறியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் ரிஜிஜூ மகிழ்ச்சி
இதனிடையே நாட்டில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்தியாவிற்காக பதக்கங்களை வெல்லும் வீரர்களுக்காக பென்ஷன் வழங்கும் திட்டமும் இதையொட்டியே கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.