டெல்லி : செவ்வாய் அன்று வெளியான பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை பிவி சிந்து ஒரு இடம் பின்தங்கி ஆறாம் இடத்தை பிடித்தார்.
அதே சமயம், ஆடவர் பிரிவில் பாருபள்ளி காஷ்யப் முதல் 25 இடங்களுக்குள் நுழைந்து அசத்தினார்.
பிவி சிந்து கடந்த இரு வாரங்களில் இரண்டு முக்கிய தொடர்களில் மோசமாக தோல்வி அடைந்தார். சீன ஓபன் மற்றும் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர்களில் முதல் இரு சுற்றுகளுக்குள் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார் சிந்து.
அதன் காரணமாக, அவரது தரவரிசை ஒரு இடம் கீழே இறங்கி ஆறாம் இடத்திற்கு வந்துள்ளது. முன்பு இரண்டாம் இடத்தில் இருந்த சிந்து, அடுத்து நடைபெறும் டென்மார்க் ஓபன் மற்றும் பிரெஞ்சு ஓபன் தொடர்களில் வெற்றிகளை குவித்தால், பட்டம் வென்றால், மீண்டும் தரவரிசையில் ஏற்றம் காண்பார்.
பாருபள்ளி காஷ்யப் கடந்த கொரியா ஓபன் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். அது தான் அவரது தரவரிசையை முன்னேற்றி உள்ளது. கொரிய ஓபன் தொடரில் அரையிறுதி வரை முன்னேறினார்.
தன் தரவரிசை முன்னேற்றம் குறித்து பேசிய காஷ்யப், தான் இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் 20 இடங்களுக்குள் வர வாய்ப்புள்ளது என நம்பிக்கை தெரிவித்தார்.
சிந்து பின்தங்கி இருக்கும் நிலையில், மற்றொரு வீராங்கனை சாய்னா நேவால் தன் எட்டாம் இடத்திலேயே நீடித்து வருகிறார். கொரிய ஓபன் தொடரில் வயிற்று வலி காரணமாக முதல் சுற்றிலேயே அவர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற இந்திய வீரர்களில் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஒன்பதாம் இடத்திலும், சாய் ப்ரநீத் பனிரெண்டாம் இடத்திலும், சமீர் வர்மா பதினேழாம் இடத்திலும் உள்ளனர்.