ஹாங்காங்: 'ஹாங்காங் ஓபன்' சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால்.
ஹாங்காங் ஓபன் டென்னிஸ், கோவ்லூன் நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்த நிலையில், இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் நேற்று தாய்லாந்தின் போர்ன்டிப் பரனாப்ரசெர்ட்சக்கை எதிர்கொண்டார். முதல் சுற்றை 12-21 என்ற கணக்கில் சாய்னா இழந்ததபோதும், அடுத்தடுத்த செட்களை 21-19, 21-17 என்ற கணக்கில் வென்று அசத்தினார். இதனால் 'கடைசி 16' சுற்றில் விளையாட சாய்னாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்த சுற்றில் இன்று, உலக பேட்மிண்டன் தர வரிசையில் 11வது இடத்திலுள்ள சயாகா சாடோவை எதிர்கொண்டார் சாய்னா நேவால். இன்றும் முதல் சுற்றை 18-21 என்ற கணக்கில் இழந்தார் சாய்னா. ஆனால் பதிலடியை வேகப்படுத்திய சாய்னா, அடுத்த செட்டை 21-9 என்ற கணக்கில் அபாரமாக வென்று அசத்தினார். இதன்பிறகு மூன்றாவது செட்டையும் பெரிய கஷ்டமின்றி 21-16 என்ற கணக்கில் தன்வசப்படுத்திய சாய்னா நேவால் ஹாங்காங் ஓபன் டென்னிசின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
கால் காயத்தால் 3 மாதங்கள் ஓய்வில் இருந்த சாய்னா நேவால், அதன் பிறகு முதல் முறையாக களமிறங்கியுள்ள தொடர் இதுதான். இத்தொடரில் வெற்றியோடு தனது பயணத்தை சாய்னா நேவால் ஆரம்பித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயத்தால் அவதிப்பட்டபோது, தனது பேட்மிண்டன் விளையாட்டு வாழ்க்கை இத்தோடு முடிந்துவிடப்போவதாக சாய்னா பயந்ததாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.