பேட்மிண்டன் வீரர்கள் பாதிப்பு
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக விளையாட்டு போட்டிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பேட்மிண்டன் போட்டிகளும் அதன் வீரர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பயிற்சிகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்கள் மற்றொரு பிரச்சினை காரணமாக தங்களது பயிற்சிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இறக்குமதிக்கு அரசு தடை
எல்லை பிரச்சினை காரணமாக சீனாவிலிருந்து ஷட்டில் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், தற்போது தேசிய அளவில் ஷட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில் யோனக்ஸ் ஷட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இறக்குமதி தடை காரணமாக கடந்த ஜூன் மாதத்திலிருந்து இந்த ஷட்டில் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
பயிற்சிகள் பாதிப்பு
ஏற்கனவே உள்ள ஸ்டாக்கை கொண்டு தற்போது பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக பயிற்சிகளை மேற்கொள்ள வீரர்கள் அதிகமாக வெளிவராத நிலையில், தற்போது நிலைமை ஓரளவிற்கு கட்டுக்குள் உள்ளது. ஆனால், பழைய ஸ்டாக்குகள் போன்றவற்றை கொண்டு அதிக நாட்கள் இந்த பிரச்சினையை சமாளிக்க முடியாது என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய பேட்மிண்டன் கோச் கவலை
உடனடியாக இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது அவசியம் என்றும் நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. உலக அளவில் ஷட்டில் 90 சதவிகிதத்திற்கும் மேல் சீனாவில்தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய பேட்மிண்டன் கோச் புல்லேலா கோபிசந்தும் ஷட்டில் தட்டுப்பாடு குறித்து தன்னுடைய கவலையை தெரிவித்துள்ளார்.