பீஜிங் : சீனாவில் நடக்க இருந்த சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் கொரோனா வைரஸ் பீதியால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
2020 சீசனில் சீனாவின் முதல் பேட்மிண்டன் தொடர் சீனா மாஸ்டர்ஸ் தான். இந்த தொடர் பிப்ரவரி 25 அன்று முதல் துவங்க இருந்தது. ஆறு நாள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. சீனாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் ஹைனன் தீவில், லிங்க்ஷுய் நகரில் இந்த தொடர் நடக்க இருந்தது.
இந்த நிலையில், சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கி பலரும் பாதிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சீனாவில் சில நூறு பேர் வரை அந்த பாதிப்பால் இறந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் சிலருக்கும் கொரோனா வைரஸ் இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பீதியால் பல முன்னணி பேட்மிண்டன் வீரர்கள் சீனா மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்க முடியாது என பின் வாங்கி விட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே, உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நிலவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த அச்சத்தால் 2020 சீனா மாஸ்டர்ஸ் தொடர் தள்ளி வைக்கப்படுவதாகவும், மற்றொரு தேதியில் இந்த தொடர் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு வீரர்கள் தகுதி பெற சீனா மாஸ்டர்ஸ் தான் கடைசி வாய்ப்பு என்பதால், இந்த தொடர் வேறு தேதியில் நடக்குமா? அல்லது கைவிடப்படுமா? என்ற கவலை வீரர்கள் இடையே எழுந்துள்ளது.