சாய்னாவின் அனுபவம் பேசியது
நேற்று நடந்த மகளிர் பிரிவு பைனலில், தன்னுடைய அனுபவம் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டி லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா விளையாடினார். ரியோ ஒலிம்பிக் மற்றும் உலகசாம்பியன்ஷிப் போட்டிகளில் வௌ்ளி வென்ற சிந்து, சாய்னாவின் அனுபவத்தை சமாளித்தாலும் ஈடு கொடுக்க முடியாமல் திணறினார். 21-17, 27-25 என்ற செட்களில், 54 நிமிடங்களில் சாய்னா வென்றார்.
மூன்று முறையும் பட்டம் வென்றார்
இது சாய்னா பெறும் மூன்றாவது சீனியர் தேசிய பாட்மின்டன் பட்டமாகும். தான் விளையாடிய மூன்று முறையும் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனையை அவர் புரிந்துள்ளார். இதற்கு முன், 2006, 2007ல் சாய்னா பட்டம் வென்றார்.
பிரனாயின் மிரட்டல் ஆட்டம்
ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தான் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எச்.எஸ். பிரனாய் பதற்றமே இல்லாமல் விளையாடி வென்று மிரட்டினார். 21-15, 16-21, 21-7 என்ற செட்களில், 49 நிமிடங்களிலேயே பிரனாய் வென்றார். இதற்கு முன் இருவரும் சர்வதேச போட்டிகளில் நான்கு முறை சந்தித்துள்ளனர். அதில் கடைசி மூன்று ஆட்டங்களில் ஸ்ரீகாந்த் வென்றிருந்தார்.
போட்டியே இல்லாமல் தோல்வி
சூப்பர் சீரியஸ் போட்டிகளில் நான்கு பட்டங்கள் வென்று சாதனைப் படைத்த ஸ்ரீகாந்த், போட்டியே இல்லாமல் தோல்வியடைந்தார். தொடர்ந்து, 13 போட்களில் வெற்றி என்ற ஸ்ரீகாந்த் சாதனைக்கு ஸ்பீட் பிரேக் போட்டார் பிரனாய்.
தரவரிசையில் முந்தியிருந்தாலும் தோல்வி
நேற்று நடந்த பைனலில் குறிப்பிட வேண்டிய மற்றொரு அம்சம், வெற்றி பெற்ற சாய்னா நெஹ்வால் மற்றும் எச்.எஸ். பிரனாய் இருவரும் உலகத் தரவரிசையில், 11வது இடத்தில் உள்ளனர். அதே நேரத்தில் தோல்வியடைந்த பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் உலகத் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளனர்.
இரட்டையரில் அஸ்வினி அபாரம்
அஸ்வினி பொன்னப்பா இரண்டு பட்டங்களை வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக்ராஜ் ராங்கி ரெட்டியுடனும், மகளிர் இரட்டையரில் என். சிக்கி ரெட்டியுடனும் இணைந்து விளையாடி சாம்பியன் பட்டத்தை அவர் வென்றார். ஆடவர் இரட்டையரில் மனு ஆத்ரி, சுமீத் ரெட்டி ஜோடி பட்டம் வென்றது.