அர்ஜுனா விருது
2020ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் பரிந்துரைப் பட்டியலை இந்திய பாட்மிண்டன் அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் இரட்டையர் பிரிவில் ஆடி வரும் சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி மற்றும் ஒற்றையர் பிரிவு வீரர் சமீர் வர்மா பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.
மூவர் நிலை
இந்த மூவரில் சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி 2018 காமன்வெல்த் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். சமீர் வர்மா இதுவரை காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றதில்லை. அவர் கடந்த ஆண்டு அத்தனை சிறப்பான செயல்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை.
விளக்கம்
அவரது சிறப்பான வெற்றிகள் 2016 ஹாங்காங் ஓபன் இறுதிப் போட்டியில் ஆடியது, 2018இல் மூன்று பட்டங்கள் வென்றது ஆகியவை மட்டுமே. சமீர் ரெட்டியை தேர்வு செய்தது பற்றி விளக்கம் அளித்துள்ள இந்திய பாட்மிண்டன் அமைப்பு, கடந்த நான்கு ஆண்டுகளில் வீரர்களின் செயல்பாட்டை கருத்தில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
பிரணாய் சிறப்பான செயல்பாடு
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளிலும் பிரணாய் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். 2018இல் காமன்வெல்த் தொடரில் கலப்பு அணியில் ஒரு அங்கமாக இருந்து தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார்.
அதிர்வலைகளை ஏற்படுத்தினார்
2017இல் பிரணாய் உலகின் நம்பர் 1 பாட்மிண்டன் வீரர் லீ சாங் வெய் மற்றும் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங் ஆகியோரை அடுத்தடுத்த போட்டிகளில் வீழ்த்தி இந்தோனேசிய ஓபன் தொடரில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். அதே ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியிலும் ஆடினார்.
கொந்தளித்துள்ளார் பிரணாய்
இத்தனை முக்கிய வெற்றிகளை பெற்றும் தன்னை இரண்டு ஆண்டுகளாக அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யாமல் இருப்பதை சுட்டிக் காட்டி கொந்தளித்துள்ளார் பிரணாய். அவரது கருத்தால் இந்திய பாட்மிண்டன் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.
ஒரு ஜோக்
"காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்றவரை பரிந்துரை செய்யவில்லை. அந்த பெரிய தொடர்களில் ஆடாத ஒருவரை பரிந்துரை செய்துள்ளார்கள். இந்த நாடு ஒரு ஜோக்" என அவர் ட்விட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.