6000 ரன்கள் குவிப்பு
கடந்த 1969ல் கான்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் முதல்முறையாக களமிறங்கிய கர்நாடக வீரர் குண்டப்பா விஸ்வநாத், முதல் போட்டியிலேயே சதமடித்தார். தொடர்ந்து 14 ஆண்டுகள் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்த குண்டப்பா, 14 சதங்களை அடித்து 6000 ரன்களை அடித்துள்ளார்.
சிறப்பான கவனம்
கர்நாடக ரஞ்சி அணியிலும் சர்வதேச இந்திய அணியிலும் இடம்பெற்று சுனில் கவாஸ்கருக்கு இணையாக பேசப்பட்டவர் குண்டப்பா. கர்நாடக அணியில் அப்போதைய கேப்டன் எரப்பள்ளி பிரசன்னா மற்றும் இந்திய அணியில் பட்டோடி கேப்டன்ஷிப்பிலும் இவர் சிறப்பான கவனத்தை பெற்றிருந்தார்.
சிறப்பான ஸ்கொயர் கட்ஸ்
முன்னாள் வீரர் சந்து போர்டும், பட்டோடியிடம் தன்னை சிபாரிசு செய்ததால், தான் எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே இந்திய அணியில் இடம் பிடித்ததாக குண்டப்பா மேலும் கூறினார். கர்நாடகாவில் இருந்து இந்திய அணியில் இடம்பெற்ற முதல் சூப்பர்ஸ்டார் வீரர் இவர். தன்னுடைய ஸ்கொயர் கட்ஸ் போன்றவற்றால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய அணியில் நீக்கம்
இதனிடையே, 1982 -1983 ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த குண்டப்பா, 6 டெஸ்ட் போட்டிகளில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலும் தொடர்ந்து உலக கோப்பை தொடரிலும் அவர் நீக்கப்பட்டார்.
வீரர்களுக்கு இயல்புதான்
இந்நிலையில், திகாஜரா தந்தகாதே என்ற நிகழ்ச்சிக்காக பேசிய குண்டப்பா, சில தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் போவது வீரர்களுக்கு இயல்பானதுதான் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்காக பாகிஸ்தான் தொடருக்கு பின்பு தன்னை அணியில் சேர்க்காதது, தன்னை மிகவும் வேதனைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.