இங்கிலாந்து பேட்டிங்
நாட்டிங்கமில் தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சிறப்பாக பவுல் செய்த அஷ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
முதல் விக்கெட்
ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே ரோரி பர்ன்ஸ் பும்ரா ஓவரில் க்ளீன் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதனால், இங்கிலாந்து ரன் கணக்கை தொடங்காமலேயே தனது முதல் விக்கெட்டை இழந்தது. ஆட்டம் முதல் ஓவரிலேயே சூடு பிடித்தது. அதன் பிறகு பும்ரா, ஷமி என மாற்றி மாற்றி பவுலிங்கில் நெருக்கடி கொடுக்க, இங்கிலாந்து நிதானமாக ஒவ்வொரு பந்துகளையும் சந்தித்தது.
முதல் ரிவியூ
பிறகு முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரைக் கொண்டு அட்டாக்கை துவக்கினார் கேப்டன் கோலி. இதற்கு உடனடியாக பலனும் கிடைத்தது. 20வது ஓவரில் தான் அந்த மேஜிக் நிகழ்ந்தது. சிராஜ் வீசிய 20.2வது ஓவரில் க்ராலேவுக்கு கீப்பர் கேட்சுக்கு அப்பீல் கேட்கப்பட்டது. ஆனால், அம்பயர் அவுட் கொடுக்க மறுக்க, கேப்டன் கோலி மிக உறுதியாக ரிவியூ எடுத்தார். ஆனால், பந்து பேட்டிலும் படவில்லை. எல்பிடபிள்யூ-வும் ஆகவில்லை.
இம்முறை விக்கெட்
பிறகு அதே ஓவரின் கடைசி பந்தில், மீண்டும் பந்து பெரும் சப்தத்துடன் பண்ட் கைகளில் தஞ்சமடைந்தது. இந்திய வீரர்கள் அவுட் அப்பீல் போக, அம்பயர் மீண்டும் மறுத்தார். கேப்டன் கோலியும் ரிவ்யூ எடுக்க மிகவும் யோசித்தார். ஆனால், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விடவில்லை. கேப்டன் கோலியிடம் ரிவ்யூ உறுதியாக எடுக்கலாம் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார். சரி எடுத்துப் பார்ப்போமே என்று கோலி ரிவ்யூ எடுக்க, இம்முறை பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிய, ஒட்டுமொத்த வீரர்களும் துள்ளிக் குதித்தனர். இங்கிலாந்தும் தனது 2வது விக்கெட்டை இழந்தது.
அசத்தும் ரிஷப்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இருந்தது வரை, கேப்டன் கோலிக்கு எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது. தோனி கண் அசைத்தால் போதும்.. மறுக்காமல் ரிவ்யூ எடுப்பார் கோலி. அந்த விக்கெட் நூறு சதவிகிதம் உறுதியாகும். சமயத்தில் கேப்டன் கோலியை கன்சிடரே செய்யாமல், தோனி தானாகவே ரிவ்யூ சென்றுவிடுவார். தோனியின் பவர் அப்படி. இப்போது ரிஷப் பண்ட் அந்த பொறுப்புகளை தன் வசம் எடுத்துக் கொண்டிருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. கேப்டன் கோலியிடம் உறுதியாக ரிவ்யூ எடுக்க ரிஷப் வலியுறுத்திய விதம், அவரை எதிர்கால தோனியாக கண்முன் காட்டுகிறது.