டெல்லி : கொரோனாவின் கோர விளையாட்டுக்கு இதுவரை சர்வதேச அளவில் ஏறக்குறைய 5000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதன் தீவிரம் உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அரசுகள், தங்களது மாநிலங்களில் ஐபிஎல் உள்ளிட்ட மக்கள் கூடும் போட்டிகளுக்கு தடை விதித்துள்ளன. ஐபிஎல் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளன.
டெல்லியில் விளையாட்டு போட்டிகளுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ள நிலையில் வரும் 24ம் தேதி முதல் 29ம் தேதிவரை அங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தியா ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவின் கோரத் தாக்குதல் பல்வேறு நாடுகளையும் செயலிழக்க செய்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இதுவரை சர்வதேச அளவில் ஏறக்குறைய 5,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச அளவில் பல விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன அல்லது ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் மட்டும் நடத்தப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் பாதிப்பையடுத்து கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அரசுகள், தங்களது மாநிலங்களில் ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகளை நடத்த அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்தியாவில் ஆண்டுதோறும் மிகுந்த பரபரப்பிற்கு இடையில் நடத்தப்படும் ஐபிஎல் தொடரும் தற்போது ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் ரசிகர்கள் இல்லாத போட்டியாகவே இது நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்படுவதாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். இதையடுத்து வரும் 24ம் தேதி முதல் 29ம் தேதிவரை அங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தியா ஓபன் பாட்மின்டர் தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தகுதி போட்டிகளாக இவை உள்ளன.
ஏற்கனவே மத்திய அரசின் விசா கட்டுப்பாடுகளால் தொடரை நடத்துவதில் சிக்கல் இருந்த நிலையில், தற்போது டெல்லி அரசின் நிலைப்பாடு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய பேட்மின்டன் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொடரில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்களும் வருகை தரவேண்டிய நிலையில், விசா கட்டுபாடுகள் குறித்து சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அங்கிருந்து வரும் பதிலைக் கொண்டே, தொடரை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே சர்வதேச அளவில் 4 பேட்மின்டன் தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தியா ஓபன் போட்டிகள் நடைபெறுவதும் கேள்விக்குறியாகியுள்ளது.