பேட்மின்டன் சாம்பியன்ஷிப் 2021
பிரிட்டனில் இன்று துவங்கியுள்ள அனைத்து இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் 2021 தொடரில் பங்கேற்க இந்திய வீரர்கள் தயாராக உள்ளனர். முன்னதாக இவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் 3 வீரர்கள் மற்றும் ஒரு ஊழியருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளதாக இந்திய பேட்மின்டன் கழகத்தின் செயலாளர் அஜய் சிங்கானியா உறுதிப்படுத்தியிருந்தார்.
தொடர் கண்காணிப்பு
ஆயினும் இந்த தகவல் வாய் வார்த்தையாக மட்டுமே வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்றும் சிங்கானியா தெரிவித்திருந்தார் அவர்களுக்கு முன்னதாகவே கொரோனா பாதித்திருந்திருக்கலாம் என்றும் இதுகுறித்து சர்வதேச பேட்மின்டன் பெடரேஷனுடன் தொடர்பில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சாய்னா ஆதங்கம்
இதனிடையே இந்த தொடரில் பங்கேற்பதற்காக பிரிட்டன் சென்றிருந்த பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், கொரோனா பரிசோதனைகளின் ரிசல்ட்களை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் போட்டிக்கு முன்னதாக பயிற்சிகளில் ஈடுபட முடியவில்லை என்றும் ஜிம்மில் பிட்னஸ் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை என்றும் நேற்றைய தினம் அவர் டிவீட் செய்திருந்தார்.
தொடரில் பங்கேற்க தயார்
இதனிடையே, இந்திய வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் இல்லை என்றும் அவர்கள் இங்கிலாந்து ஓபன் போட்டியில் பங்கேற்க தயாராக உள்ளதாகவும் இந்திய பேட்மின்டன் கோச் மதியாஸ் போ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனைகளால் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து இன்றைய தினம் 5 மணிநேரம் தாமதமாக போட்டிகள் துவங்கின.