பெங்களூரு : பெங்களூருவில் சென்ற ஆண்டு நடைபெற்ற இந்திராநகர் கிளப் பாட்மிண்டன் லீக் தொடர் (IBL 2018) அதன் இரண்டாவது சீசனில் கால் வைத்துள்ளது.
இது ஒரு உள்ளூர் பாட்மிண்டன் தொடர் என்றாலும், இதிலும் ஏலம், பரிசுகள், விளம்பரதாரர்கள் என ஒரு தேசிய அளவிலான தொடர் போல தூள் பறக்கிறது.
வரும் நவம்பர் 11 அன்று வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து போட்டிகள் வரும் நவம்பர் 30 முதல் தொடங்கி டிசம்பர் 8 வரை நடைபெற உள்ளது.
சென்ற ஆண்டு 116 வீரர்கள், நான்கு அணிகளாக பங்கேற்றனர். இந்த ஆண்டு இந்த தொடர் வளர்ச்சி பெற்றுள்ளது என்பதற்கு சான்றாக 150 வீரர்கள் ஐந்து அணிகளாக பிரிந்து பங்கேற்கின்றனர்.
போட்டிகள், ஆடவர் பிரிவு, மகளிர் பிரிவு ,மற்றும் குழந்தைகள் பிரிவு என மூன்று பிரிவுகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிக்கான அதிகாரி நீரஜ் மிஸ்ரா கூறுகையில், "பெங்களூருவில் எப்போதும் பாட்மிண்டன் விளையாட்டுக்கு என பாரம்பரியம் உள்ளது. அதனால், அதிக பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு 150 வீரர்கள் மட்டுமே அதிக பட்சம் பங்கு பெற முடியும் என நிர்ணயித்து இருந்தோம். அந்த எண்ணிக்கையை விரைவில் எட்டி விட்டோம். அந்த எண்ணிக்கைக்கு மேல் வீரர்களை எங்கள் கிளப்பில் விளையாட வைக்க முடியாது" என கூறினார்.
இது போன்ற உள்ளூர் விளையாட்டுத் தொடர்கள் ஒவ்வொரு நகரத்திலும் நடைபெற்றால் விளையாட்டுத் துறையில் பெரிய மாற்றம் ஏற்படும். நம் ஊரிலும் இப்படி பெரிய அளவிலான உள்ளூர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுமா?