சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) 19-10-2013 அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை "இறகுப்பந்து விளையாட்டுப் போட்டி" ஒன்றை சிங்கப்பூர் பூப்பந்தாட்டம் விளையாட்டுக் கூடத்தில் நடத்தியது.
சிங்கப்பூருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கிலும், ஆரோக்கியமான வாழ்விற்கு வழிகாட்டும் வகையிலும் நடத்தப்பட்ட இறகுப்பந்து போட்டியில் இருபது போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டியின் நடுவர்களாக இத்துறையில் அனுபவமிக்க திரு. ஹென்றி டியோ, திரு. அகஸ்டின், திரு. ரோஸ்தம் ஆகியோர் பங்காற்றினர்.
இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அப்துல் காதர் மற்றும் சஹாபுதீன் குழுவினருக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கஜுரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், தொழிலதிபர் ஜனாப் ஹாஜி முஹம்மது நஜ்ரன் முதல் பரிசு கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார். சிறப்பு விருந்தினருக்கு சங்கத்தின் செயலாளர் அப்துல் சுபஹான் பொன்னாடைப் போர்த்த, துணை செயலாளர் அப்துல் நஜீர் நினைவுப் பரிசு வழங்கினார்.
சங்கத்தின் துணைத் தலைவர் கலந்தர் மொஹிதீன் இப்போட்டியை வழி நடத்தினார். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கணிதப் பேராசிரியர் அமானுல்லா போட்டியை துவங்கி வைத்தார். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும், பார்வையாளர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் பெருமையைப் பறைசாற்றும் நிகழ்வாக இனிதே நிறைவுற்றது.