உதவி செய்யும் நல்லவர்கள்
இப்படிப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்கின்றனர். அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஏன் மக்களே கூட தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். இதில் அரசு மட்டுமே உதவி செய்வது இயலாத காரியம் என்பதால் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் உதவிக் கரம் நீட்டி வருகின்றனர்.
உதவி செய்யும் விளையாட்டுத் துறையினர்
அந்த வகையில் விளையாட்டுத் துறையினரும் கூட பெரிய அளவில் பலருக்கும் உதவி வருகின்றனர். தங்களது அமைப்புகள் மூலமாக பலர் உதவி செய்து வரும் நிலையில் பேட்மிண்டன் சாம்பியன் ஜுவாலா கட்டா களத்தில் இறங்கி பலருக்கும் உதவி செய்ய ஆரம்பித்துள்ளார். இது பலரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. இப்படி செய்யும்போதுதான் நாமும் இப்படிச் செய்ய வேண்டும் என்ற ஊக்கம் பலருக்குக் கிடைக்கும்.
உதவி செய்ய குதித்த ஜுவாலா கட்டா
ஹைதராபாத்தில் தனது வீட்டுக்கு அருகே வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு தானே தனது கையால் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார் ஜுவாலா கட்டா. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, முகக் கவசம், கிருமி நாசினி என பல பல பொருட்களை அவர் கொடுத்துள்ளார். பிற மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்தோர், சுகாதாரப் பணியாளர்கள் என பலருக்கும் அவர் உதவி செய்துள்ளார்.
நீங்களும் உதவுங்கள்
உண்மையில் ஜுவாலாவின் இந்த மனசைப் பாராட்டியாக வேண்டும். வரலாறு காணாத நெருக்கடியில் மனித குலம் சிக்கியுள்ளது. இதை விட பெரிய சோதனை யாருக்கும் வந்து விடாது. அப்படி ஒரு இறுக்கமான நிலையில் அனைவரையும் தள்ளி விட்டுள்ளது இந்த கொரோனா. இந்த சமயத்தில் கூட மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளாவிட்டால் அதை விட பெரிய கொடுமை இருக்க முடியாது. கை கொடுப்போம் நமக்கு நாமே.