ஜகார்த்தா: இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று ஏமாற்றம் தந்தார் பி.வி.சிந்து.
இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி.சிந்து நேற்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் சீனாவின் சென் யூவை 21-19, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதையடுத்து சிந்து ஜப்பானின் அகனே யமகுச்சியுடன் இறுதிபோட்டியில் மோதினார். பரபரப்பான இந்த போட்டியின் முதல் சுற்றில் ஜப்பானின் அகனே யமகுச்சி 21-15 என்ற செட் கணக்கில் வென்றார்.
2வது சுற்றில் எப்படியாவது வெற்றியடைய வேண்டும் போராடினார் பிவி சிந்து. ஆகையால் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. ஆனால் 21-16 என்ற செட் கணக்கில் மீண்டும் தோல்வியை சந்தித்தார் பி.வி.சிந்து. தங்கம் வெல்வார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பிவி சிந்து.
இதற்கு முன் இருவரும் 14 முறை மோதியுள்ளனர். அதில் பிவி சிந்து 10 முறை வென்றுள்ளார். மேலும் கடைசி 4 போட்டிகளில்,சிந்து யமகுச்சியிடம் தோல்வி அடைந்ததே கிடையாது. இருந்தாலும் இன்றைய ஆட்டத்தில் யம குச்சி சிறப்பாக செயல்பட்டு பிவி சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 2வது இடம் பிடித்து பிவி சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.