டெல்லி : பிரீமியர் பேட்மிண்டன் லீக் ஐந்தாவது சீசன் ஏலத்தில் உலகின் நம்பர் 1 பேட்மிண்டன் வீராங்கனையான டாய் சு இங் அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.
பிரீமியர் பேட்மிண்டன் லீக் எனும் பேட்மிண்டன் தொடர் வருடாவருடம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட்டின் ஐபிஎல் போல நடைபெறும் இந்த தொடரில் இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு முன்னணி பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
2020 பிரீமியர் பேட்மிண்டன் லீக் தொடருக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய நட்சத்திரங்களுக்கு போட்டி இருந்தாலும், வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் தான் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.
இந்த ஏலத்தில் 154 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 74 இந்தியர்கள், 80 வெளிநாட்டினரும் பங்கேற்றனர். இந்தியாவின் முன்னணி வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டி இந்த முறை ஏலத்தில் பங்கேற்கவில்லை.
மகளிர் பேட்மிண்டன் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவின் டாய் சு இங்-ஐ பெங்களூரு ராப்டர்ஸ் அணி ரூ.77 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கியது. ஹைதராபாத் ஹன்டர்ஸ் அணி தங்கள் அணியின் முன்னணி வீராங்கனை பிவி சிந்துவை தக்க வைத்துக் கொண்டது.
இந்தியாவின் இரட்டையர் பிரிவு வீராங்கனை சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி ரூ.62 லட்சத்திற்கு ஏலத்தில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இந்த ஏலத்தில் அதிக விலைக்கு போன இந்திய வீரர் இவர் தான்.
அவரது ஜோடியான சிராக் ஷெட்டி ரூ.15.50 லட்சத்திற்கு புனே 7 யேசஸ் அணி வாங்கியது.