ரியோ: ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகள் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்தியாவின் பிவி சிந்து நாளை மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இறுதியில் ஸ்பெயினின் கரோலினா மரினுடன் மோதுகிறார்.
ஒலிம்பிக் வரலாற்றில் தற்போதுதான் 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதனால் எந்த பிரிவிலாவது இந்தியா ஏதேனும் பதக்கங்களை வாங்கிவிடாதா என்ற ஏக்கம் தொடக்கம் முதலே இருந்து வந்தது.
அதுவும் 36 ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியும் தங்கத்தை வென்றுவிடும் என்ற நம்பிக்கை இந்திய ஹாக்கி அணி மீது இருந்தது. ஆனால் அது காலிறுதியுடன் முடிவடைந்து போனது. 36 ஆண்டுகளுக்கு பின்னர் ஒலிம்பிக்குக்குள் நுழைந்த மகளிர் ஹாக்கி அணியும் சோபிக்கவில்லை.
முன்னெப்போதும் இல்லாதவகையில் இந்தியாவின் தீபா கரம்கர், முதல் முறையாக ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை இழக்க நேரிட்டது. இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி முதலாவது பதக்கத்தை இந்தியாவுக்கு இன்று காலை பெற்றுத் தந்தார். அவர் வெண்கலப் பதக்கத்தை பெற்று இந்தியாவை பதக்க பட்டியலில் இடம்பெற வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று இரவு நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் அரை இறுதியில் இந்தியாவின் பிவி சிந்து அசத்தலாக விளையாடி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இந்தியாவுக்கான மற்றொரு பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார். நடப்பு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா முதல் முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
அத்துடன் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகள் வரலாற்றிலேயே இந்திய வீராங்கனை ஒருவர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதும் இதுவே முதல் முறை!
ஆம் தொடக்கம் முதலே அசத்தலான விறுவிறுப்பான ஆட்டத்தை அட்டகாசமாக வெளிப்படுத்தி வரும் பிவி சிந்து உலகின் முதல் நிலை வீராங்கனையான ஸ்பெயின் புயல் கரோலினா மரினுடன் நாளை இரவு மோதுகிறார்.
இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இன்றே சரித்திரத்தில் இடம்பிடித்துவிட்ட நம் தேசத்தின் பெருமைக்குரிய வீராங்கனை பிவி சிந்து தங்கம் வென்று வரலாறு நெடுகிலும் பேசுகிற சாதனையை படைப்பார் என்றே எதிர்பார்ப்போம்.