ஐதராபாத் : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சர்வதேச அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிக ஜனத்தொகை கொண்ட இந்தியாவும் அதிலிருந்து தப்பிக்க பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறது.
மக்களை வீட்டிற்குள்ளேயே முடக்கி, அதன்மூலம் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும்வகையில் வரும் ஏப்ரல் 14ம் தேதிவரை ஊரடங்கை மத்திய அரசு அறிவித்து அமல்படுத்தியும் வருகிறது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயை அம்மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்து விளையாட்டு வீராங்கனையாக தன்னுடைய கணக்கை துவக்கியுள்ளார் பேட்மின்டன் வீராங்கனை பிவி.சிந்து.
கொரோனா பாதிப்பிற்கு உலகளவில் 21,000 பேர் உயிரிழந்துள்ளனர். 4,00,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைகளுக்கு செல்ல முடியாத நிலையில், தினக்கூலிகள் அன்றாடம் உணவிற்கே வருந்தும் நிலை இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் உருவாகியுள்ளது. இதையொட்டி, பல்வேறு நலத்திட்டங்களை அரசுகள் அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் சர்வதேச அளவில் நிதியுதவி அளித்து வருகின்றனர். மெஸ்ஸி, பெடரர் உள்ளிட்ட வீரர்களும் தங்களது நாட்டின் பொதுநல நிதிக்கு நன்கொடை அளித்துள்ளனர். இந்நிலையில், பிரபல பேட்மின்டன் விராங்கனை பி.வி.சிந்து தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கவுள்ளதாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
கடந்த ரியோ ஒலிம்பிக்கில் பேட்மின்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி. சிந்து, டோக்கியோவில் நடைபெறவிருந்த தன்னுடைய இரண்டாவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருந்தார். ஆனால், இந்த போட்டிகள் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளன. உலக அளவில் பல்வேறு பேட்மின்டன் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.