சாதனைகளுக்கு சொந்தக்காரர்
இந்திய பேட்மிண்டனின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருகிறார் பிவி சிந்து. பல்வேறு சாதனைகளை இந்த இளம் வயதிலேயே செய்துவரும் சிந்து அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தற்போது ஐதராபாத்தின் சாய் மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
தந்தையே உத்வேகம்
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் பங்கேற்ற அவர் விளையாட்டு, கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசினார். தான் விளையாட்டுத்துறையை தேர்ந்தெடுக்க தன்னுடைய தந்தையே காரணம் என்றும் தான் பேட்மிண்டனை தேர்ந்தெடுத்தபோது அவர் எந்த கேள்வியும் எழுப்பாமல் தன்னுடைய சாய்சிற்கு விட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பான விளையாட்டு பேட்மிண்டன்
தான் சிறுவயதில் டாக்டராக வேண்டும் என்று விரும்பியதாகவும் ஆனால் பேட்மிண்டன் வீராங்கனையாக ஆனதாகவும் தெரிவித்த அவர், ஆனால் தற்போது பேட்மிண்டன் சிறப்பான துறையாக தோன்றுவதாகவும் சிந்து மேலும் கூறினார். கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் தான் செய்ய நினைத்த பொழுதுபோக்குகளை செய்ய நேரம் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
தன்னுடைய எதிர்பார்ப்பே முக்கியம்
கொரோனா வைரஸ் அனைவரையும் கடுமையாக பாதித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள சிந்து எதிர்காலத்தில் ரசிகர்கள் இல்லாமல் விளையாட வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் தன்னுடைய ஸ்ரெஸ்ஸை எவ்வாறு அவர் எதிர்கொள்கிறார் என்பதையும் அவர் வெளிப்படுத்தினார். மற்றவர்கள் எதிர்பார்ப்பு குறித்து தான் கவலை கொள்வதில்லை என்றும் விளையாடும்போதும் தன்னை பற்றியும் தன்னுடைய எதிர்பார்ப்பு குறித்தும் மட்டுமே தான் கவலை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.