லக்னோ: சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வென்றார்.
இதன் மூலம் 28 மாதங்களுக்கு பிறகு பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
லக்னோவில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சக நாட்டு வீராங்கனையான மாள்விகாவை சிந்து எதிர்கொண்டார்
தொடக்கம் முதலே பி.வி.சிந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிந்துவின் அனுபவத்திற்கு மாளவிகாவால் ஈடு கொடுக்க முடியவில்லை. வெறும் 35 நிமிடங்களே நீடித்த இந்தப் போட்டியில் 21க்கு13, 21க்கு16 என்ற நேர் செட் கணக்கில் சிந்து வென்று 2வது முறையாக சையது மோடி பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்
இதே போன்று கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடிகளுக்குள்ளே போட்டிகள் நடந்தன. இதில் இஷான், டானிஷா ஜோடி 21க்கு16, 21க்கு12 என்ற நேர் செட் கணக்கில் ஹேமா, ஸ்ரீவித்யா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்தப் போட்டி 29 நிமிடங்களே நீடித்தது.
முன்னதாக ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் பிரான்ஸ் வீரர்கள் மெர்கல், லுகாஸ் மோத இருந்தனர். இதில் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியானது. மற்றொரு வீரர் கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் இருவரும் களமிறங்காததால் இறுதிப் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.