பாங்காக்: தாய்லாந்து ஓபன் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த ஆண்டு மூன்றாவது முறையாக ஒரு பாட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இந்த ஆண்டில் எந்த பட்டமும் வெல்லாத சிந்து, இந்த முறை பட்டம் வென்று சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தாய்லாந்து ஓபன் தொடரின் அரையிறுதியில் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவை 23-21, 16-21, 21-9 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். முதல் கேமில் 16-12 என்ற நிலையில் முன்னிலையில் இருந்த மரிஸ்காவை துரத்தி வந்த சிந்து, 16-16 என சமன் செய்தார். பின்பு, முதல் கேமின் இறுதியில் 21-21 என்ற சம நிலையில், சிந்து வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் கேமை 23-21 என்ற புள்ளிகளில் வசப்படுத்தினார்.
இரண்டாவது கேமில் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய சிந்து, பின்பு தடுமாறியதால் அந்த கேமை 16-21 என இழந்தார். வெற்றியை முடிவு செய்யும் மூன்றாவது கேமில், 18-7 என்ற புள்ளிகளில் முன்னிலை பெற்ற சிந்து, சிறிய போராட்டதிற்கு பின் அந்த கேமை 21-19 என்ற கணக்கில் வென்றார்.
இந்த வெற்றி குறித்து சிந்து கூறுகையில், "இன்று ஆட்டம் மிகக் கடினமாக இருந்தது. இந்தோனேசியப் பெண் சிறப்பாக ஆடினார். நல்ல வேளையாக, நான் இறுதியில் சமாளிக்க முடிந்தது. இரண்டாவது கேமில், நான் முன்னிலை பெற்றாலும் அதிக புள்ளிகளை விட்டுக் கொடுத்து விட்டேன். ஆனால், மூன்றாவது கேமில் மிகக் கவனமாக இருந்தேன். இறுதிப் போட்டியை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன். நாளை, ஒக்குஹாரா-விற்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டும் என எனக்கு தெரியும்" என்றார்.
ஜப்பானின் ஒக்குஹாரா-வை சந்திக்கும் சிந்து, இது வரை 10 முறை அவரை சந்தித்துள்ளார். அதில் இருவரும் 5-5 என்ற சம அளவு வெற்றி தோல்விகளை பதிவு செய்துள்ளனர். இந்த இறுதிப்போட்டி இந்த ஆண்டில் பட்டம் வெல்லும் மூன்றாவது வாய்ப்பாகும். கடந்த இரண்டு இறுதிப் போட்டிகளிலும் தோல்வியடைந்த சிந்து, இந்த முறையாவது பட்டம் வெல்வாரா எனப் பார்ப்போம்.