கோலாலம்பூர் : மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரின் மகளிர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.
மலேசியா மாஸ்டர்ஸ் தொடரில் சனிக்கிழமை அன்று நடைபெற்ற பரபரப்பான மகளிர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்பெயினின் கரோலினா மரின் மோதினர்.
கரோலினா மரின் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை ஆவார். அவரை வெற்றி கொள்வது கடினம் என்றே கணிக்கப்பட்டு இருந்தாலும், சாய்னா தன் பலம் கொண்ட மட்டும் மோதினார்.
சுமார் 40 நிமிடம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சாய்னா 16-21, 13-21 என்ற கேம் கணக்கில் தோல்வி அடைந்தார். கரோலினா மரின் இறுதிக்கு முன்னேறியுள்ளார். இறுதிப் போட்டியில் அவர் தாய்லாந்து அல்லது மலேசிய வீராங்கனையை எதிர்கொள்வார்.
முன்னதாக சாய்னா நேவால் காலிறுதியில் ஜப்பானின் நோசொமி ஒக்குஹாராவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார். மலேசியா மாஸ்டர்ஸ் ஆடவர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறி இருந்தார். தற்போது அரையிறுதியில் சாய்னா நேவாலும் தோல்வி அடைந்துள்ளார்.