இன்று துவக்கம்
தாய்லாந்து ஓபன் 2021 தொடர் இன்று முதல் துவங்கி நடைபெறவுள்ளது. இதையொட்டி வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சாய்னா நேவால் மற்றும் எச்எஸ் பிரனோய் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா நெகட்டிவ்
இந்த தொடரையொட்டி இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பிவி சிந்து, சாய் பிரனீத், கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் அவர்களுக்கு நெகட்டிவ் வந்துள்ளது. சாய்னா நேவாலின் கணவர் பருப்பள்ளி காஷ்யாப்பும் இந்த தொடரில் இடம்பெற்றுள்ள நிலையில் அவருக்கு கொரோனா உள்ளதா என்பது குறித்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.
10 நாட்களுக்கு குவாரன்டைன்
இதனிடையே, சாய்னா நேவால் மற்றும் பிரனோய் இருவரும் பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் அடுத்த 10 நாட்களுக்கு குவாரன்டைனில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சாய் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வீரர்கள், அணி நிர்வாகத்தினருடன் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ராணிகிரெட்டி -அஸ்வினி வெற்றி
சாய்னா, பிரனோய் இருவரும் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பிவி சிந்து உள்ளிட்டவர்கள் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் சாத்விக் சாய்ராஜ் ராணிகிரெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் இரட்டையர் பிரிவில் விளையாடி வெற்றி பெற்றுள்ளனர்.