அடுத்த ஆண்டிற்கு தள்ளிவைப்பு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதில் பங்கேற்கும் பேட்மிண்டன் வீரர்களுக்கான பயிற்சி முகாம்கள் கடந்த 7ம் தேதி ஐதராபாத்தின் கோபிசந்த் தேசிய அகாடமியில் துவங்கியுள்ளது.
4 வீரர்கள் பங்கேற்பு
இதில் பங்கேற்க 8 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிவி சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரணீத் மற்றும் சிக்கி ரெட்டி ஆகிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மட்டுமே பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்க 10 பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கணவர் இடம்பெறாததால் அதிருப்தி
இந்த பட்டியலில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நேவாலின் பெயரும் இடம்பெற்றுள்ள நிலையில் அவருடைய கணவர் பருப்பள்ளி காஷ்யாப்பின் பெயர் இடம்பெறாதது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கணவர் தன்னுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சாய்க்கு மெயில் மூலம் கோரிக்கை
இதையடுத்து அவர் கோபிசந்த் அகாடமியில் பயிற்சி மேற்கொள்ளாமல் அருகில் உள்ள வேறொரு இடத்தில் தன்னுடைய பயிற்சியைமேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இதனிடையே காஷ்யாப்பும் சாய் மற்றும் பேட்மிண்டன் கழகத்திற்கு மெயில் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். உலக அளவில் 25வது இடத்திலும் இந்திய அளவில் 3வது இடத்திலும் காஷ்யாப் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சாய்னா முடிவெடுக்கவில்லை
தகுதி அடிப்படையில் தன்னை தேசிய முகாமில் இணைக்க வேண்டும் என்றும் தகுதி இல்லாதவரை முகாமில் இணைக்க சாய்னா வாதாடவில்லை என்றும் காஷ்யாப் மேலும் கூறினார். மேலும் தேசிய முகாமில் பங்கேற்பது குறித்து சாய்னா இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் காஷ்யாப் குறிப்பிட்டுள்ளார்.