வூஹான்: சீனாவில் நடக்கும் ஆசிய சாம்பியன்ஷிப் பாட்மின்டன் போட்டியில் பட்டம் வெல்வதில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால், பிவி சிந்து, கிடாம்பி ஸ்ரீகாநத், எச்எஸ் பிரனாய் இடையே கடும் போட்டி உள்ளது. நால்வரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியில் பாட்மின்டன் பிரிவில் இந்தியா அசத்தியது. அணி மற்றும் தனிநபர் பிரிவுகளில் 2 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என, 6 பதக்கங்களை வென்றது. அதற்கடுத்து சீனாவின் வூஹானில் நடக்கும் ஆசிய சாம்பியன்ஷிப் பாட்மின்டன் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாநத் முதல் செட்டில் 7-2 என்ற முன்னிலையில் இருந்தார். அவரை எதிர்த்து விளையாடிய ஹாங்காங்கின் வாங்க் விங்க் கி வின்செட் காயம் காரணமாக வெளியேறினார். அதையடுத்து ஸ்ரீகாநத் கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் எச்எஸ் பிரனாய் 16-21, 21-14, 21-12 என்ற செட்களில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். அதே நேரத்தில் சாய் பிரனீத் தோல்வியடைந்து வெளியேறினார்.
மகளிர் ஒற்றையரில் சாய்னா நெஹ்வால் 21-18, 21-8 என்ற கணக்கில் சீனாவின் காவ் பாங்க்ஜியை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். பிவி சிந்து 21-12, 21-15 என்ற கணக்கில் சீனாவின் சென் ஜியாஜின்னை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.