சிந்துவுக்கு வெற்றி
இந்த நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவின் அரை இறுதிக்கு பிவி சிந்து முன்னேறியுள்ளார். நேற்று இரவு நடந்த கால் இறுதியில், மிகவும் டேஞ்சரான ஜப்பானின் நோசோமி ஒகுகாராவை 20-21, 21-18, 21-18 என்ற செட்களில் கடினமாக போராடி வென்றார் சிந்து.
உலக சாம்பியனை வென்றார்
கடந்தாண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி பைனலில் சிந்துவை வென்ற ஒகுகாராவுக்கும் சிந்து மற்றும் சாய்னாவுக்கும் இடையே எப்போதும் கடும் போட்டி இருக்கும். உலகத் தரவரிசையில், 6வது இடத்தில் இருந்தாலும், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்துவுக்கு நேற்றைய போட்டியிலும் கடும் நெருக்கடி கொடுத்தார் ஒகுகாரா.
சபாஷ் சரியான போட்டி
ஆல் இங்கிலாந்து ஓபன், 2015 சாம்பியனான ஒகுகாராவுக்கு எதிரான சிந்துவின் இந்த போட்டி, இந்த ஆண்டின் மிகச் சிறந்த போட்டிகளில் ஒன்றாகும். இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்து, யார் வெல்வார்கள் என்பது கணிக்க முடியாத அளவுக்கு மிகக் கடினமான போட்டியாக இருந்தது.
பட்டம் வென்ற படுகோனே, கோபிசந்த்
ஆல் இங்கிலாந்து ஓபன் போட்டியில், இதுவரை இரண்டு இந்தியர்கள் மட்டுமே பட்டம் வென்றுள்ளனர். 1980ல் பிரகாஷ் படுகோனே மற்றும் 2001ல் கோபிசந்த் ஆகியோர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றனர். நாடு சுதந்திரம் அடைந்த, 1947ல், பிரகாஷ் நாத், ஆடவர் ஒற்றையரில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 1981ல் பிரகாஷ் படுகோனே இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மகளிர் ஒற்றையரில் சானியா நெஹ்வால், 2015ல் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
ஜப்பான் வீராங்கனையுடன் மோதல்
சிந்துவைப் பொருத்தவரை, 2012, 2014, 2016ல் முதல் சுற்று, 2013ல் இரண்டாவது சுற்று, 2017ல் கால் இறுதி வரை முன்னேறினார். தற்போது முதல் முறையாக அரை இறுதிக்கு நுழைந்துள்ள சிந்து, அரை இறுதியில், தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யாமகூச்சியை சந்திக்கிறார்.