இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால். இந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். இதை பாராட்டு வகையில் மத்திய, மாநில அரசுகள் தரப்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்திய விமான படையில் உள்ள வீரர்களுக்கு விடாமுயற்சியுடன் நாட்டிற்காக போராட வேண்டியதை உணர்த்தும் வகையில், சாய்னா நெஹ்வாலுடன் இன்று சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஆந்திர மாநிலம் திண்டுக்குல் என்ற இடத்தில் உள்ள இந்திய விமான நிலைய அதிகாரிகள் பயிற்சி அகடமிக்கு சாய்னா நெஹ்வால் இன்று சென்றார்.
அங்கு அவருக்கு விமானப்படை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வீரர்களுக்கு இடையிலான பாட்மிண்டன் போட்டியில் சிறப்பு விருந்தனராக சாய்னா நெஹ்வால் கலந்து கொண்டார்.
அதன்பிறகு போர் விமானத்தில் பயணிக்கும் வீரர்களின் சீருடைக்கு மாறினார் சாய்னா நெஹ்வால். கழுத்தில் இருந்து கால் பாதம் வரை நீண்ட பச்சை நிற உடையை அணிந்த சாய்னா நெஹ்வால், விமானப்படை அதிகாரிகளுடன் நடந்து வந்து பத்திரிக்கையாளர்களுக்கு போட்டோ 'போஸ்' கொடுத்தார்.
அதன்பிறகு போர் விமானத்தின் பெண் பயிற்சியாளர் ஒருவருடன் தயாராக நிறுத்தப்பட்டிருந்த கிரண் எம்.கே.2 ஜெட் பயிற்சி விமானத்தில் ஏறினார். விமானம் மெதுவாக ஓடுதளத்தில் ஓட ஆரம்பிக்க, சாய்னா நெஹ்வால் கைகளை அசத்து காட்டி பயணத்திற்கு தயாரானார். விமான பயணத்திற்கு பிறகு தனது அனுபவங்களை சாய்னா நெஹ்வால் பகிர்ந்து கொண்டார்.
சச்சின், டோணி எப்போ?
முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சினை சாதனைகளை பாராட்டும் வகையில், அவருக்கு இந்திய விமான படையில் கெளரவ 'கேப்டன்' பதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சச்சின், டோணி ஆகியோரின் திறமையை பாராட்டி இந்திய விமான படையின் எஸ்.யூ-30 எம்.கே.ஐ போர் விமானத்தில் பயணிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் இருவரும் இதுவரை அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.