டெல்லி : உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு இரண்டு முக்கிய தொடர்களை அதிரடியாக ரத்து செய்து உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு விளையாட்டுத் தொடர்கள் வரிசையாக தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன.
ஏற்கனவே, பல பாட்மிண்டன் தொடர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் ஓபன் மற்றும் ஈரோப்பியன் சாம்பியன்ஷிப் ஆகிய இரு தொடர்களும் முன்பு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தன.
ஆனால், இப்போது உள்ள நிலைமையில் பல நாடுகளில் இருந்து வீரர்களை அழைத்து வந்து இந்த பாட்மிண்டன் தொடர்களை நடத்துவது கடினம் என்பதால் இந்த இரு தொடரையும் இந்த ஆண்டு ரத்து செய்வதாக உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சுவிஸ் ஓபன் தொடர் மார்ச் 17 முதல் 22 வரை நடைபெறுவதாக இருந்தது. ஈரோப்பியன் சாம்பியன்ஷிப் தொடர் ஏப்ரல் 21 முதல் 26 வரை நடைபெறுவதாக இருந்தது. இந்த இரண்டு தொடர்களும் முன்னதாக தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.
பௌலர்கள் வருவாங்க... ரோபோட் மாதிரி பௌலிங் பண்ணுவாங்க இதுதான் நடக்கும்... அக்ரம் ஆரூடம்
இரண்டு தொடர்களை நடத்த வேண்டிய நிர்வாகிகள் இந்த ஆண்டு தொடரை ரத்து செய்வதே சரியான முடிவாக இருக்கும் என கூறியதை அடுத்து இரு தொடர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய பாட்மிண்டன் வீரர்கள் யாரும் இந்தியாவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பின் எந்த பாட்மிண்டன் தொடரிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கொரோனா வைரஸ் மறையும் வரை வெளிநாட்டு தொடர்களில் ஆடுவது கடினம் என கூறி வந்த நிலையில், முக்கிய தொடர்கள் ரத்தாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.