அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு
அக்டோபர் 3 முதல் 11ம் தேதிவரை டென்மார்க்கின் ஆர்ஹசில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த தாமஸ் அண்ட் ஊபர் கோப்பை பைனல்ஸ் தொடரை பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த தொடர் ரசிகர்கள் இல்லாமல் பயோ பபள் முறையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வீரர்களை அறிவித்த இந்தியா
முன்னதாக இந்த தொடருக்காக இந்தியாவும் சாய்னா நேவால், பிவி சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளுக்கான வீரர்களை அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் அதிகமாக உள்ள நிலையில் தொடரை நடத்துவது குறித்து இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தன்னுடைய கவலையை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிப்படுத்தியிருந்தார்.
விலகிய முக்கிய அணிகள்
இந்த தொடரில் இந்தோனேசியா மற்றும் தென்கொரிய அணிகள் கடந்த வெள்ளிக்கிழமை இணைந்த நிலையில், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, சீனா மற்றும் அல்ஜீரியா போன்ற அணிகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விலகின. இதையடுத்து இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
தேதி பின்னர் அறிவிக்கப்படும்
அடுத்த ஆண்டிற்கு தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள போதிலும் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து பின்னர் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் நடத்தப்படுவதன்மூலம் கடந்த மார்ச் மாதத்திலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேட்மிண்டன் போட்டிகள் மீண்டும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நலையில், தற்போது அதில் மீண்டும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.