முக்கிய போட்டி
இந்தியாவுக்காக பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு முதல் பதக்கம் (வெள்ளி) பெற்றுக் கொடுத்ததே ஆறுதலாக இருந்தது. நேற்று ஒரே நாளில் இரண்டு பதக்கங்கள் உறுதியானது. குத்துச்சண்டையில் லோவ்லினா அரையிறுதிக்கு முன்னேறி வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார். அதேபோல், பேட்மிண்டனில் பி.வி.சிந்து, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில் இன்று பி.வி.சிந்துவுக்கான அரையிறுதிப்போட்டி நடைபெற்றது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
இந்த அரையிறுதிப்போட்டியில் இந்தியாவின் சிந்து மற்றும் சீனாவின் தைபே வீராங்கனையான தாய் சூ யிங் (Tai Tzu-ying) மோதிக்கொண்டனர். சர்வதேச போட்டிகளில் இருவரும் இதுவரை 18 முறை ஒருவருக்கொருவர் மோதியுள்ளனர். இந்த மோதலில் பி.வி சிந்து 5 முறை மட்டும் வென்றுள்ளார். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் சிந்து தோல்வியையே கண்டிராததால், நிச்சயம் அரையிறுதியையும் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
முதல் செட்
போட்டியின் தொடக்கத்தில் பி.வி.சிந்துவின் கையே ஓங்கி இருந்தது. இதனால் புள்ளிகள் வித்தியாசமும் ஓரளவிற்கு அதிகமாக இருந்தன. ஆனால் முதல் சுற்றின் நடுவே திடீரென கம்பேக் கொடுத்த சீன வீராங்கனை தாய் ட்சூ யிங், புள்ளிகளை குவித்து தலைவலி ஏற்படுத்தினார். நீண்ட நேரம் சமநிலையாக சென்ற முதல் செட்டின் இறுதியில் சீன வீராங்கனை 22 -18 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
2வது சுற்று
இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சிந்து மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் சீன வீராங்கனையே ஆதிக்கம் செலுத்தினார். தொடக்கத்தில் 4 -4 என சமநிலையில் இருந்த புள்ளிகள் பின்னர் எதிரணியின் பக்கம் சாய தொடங்கியது. இதனால் 2வது சுற்றிலும் 22 - 12 என்ற கணக்கில் சிந்து தோல்வியை தழுவினார். இதன் மூலம் 22 - 18, 21 -12 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் தாய் ட்சூ யிங் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ரசிகர்கள் ஏமாற்றம்
பி.வி.சிந்து அரையிறுதியில் தோல்வியடைந்துள்ளதால், அடுத்ததாக வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாளை நடைபெறும் இதற்கான போட்டியில் சீனாவின் பின் ஜியாவோவுடன் மோதுகிறார். இந்த போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பதக்கம் கிடைக்கும் என்பதால் சிந்துவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஒலிம்பிக் போட்டியின் போது வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து இந்த முறை தங்கப்பதக்கமே வெல்வார் என பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது அவை சுக்கு நூறாக உடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஆகியுள்ளது. எனினும் அவருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.