பேட்மிண்டன் போட்டி
பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற 3 தகுதிச்சுற்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இந்த போட்டியில் ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷத்துடன் போட்டிப்போட்டதால் புள்ளிகள் மழை பொழிந்து வந்தது. இறுதிவரை பரபரப்பாக சென்ற இந்த சுற்றில் 21 - 13 என்ற புள்ளிக்கணக்கில் பி.வி. சிந்து முதல் செட்டை கைப்பற்றினார்.
விடாப்பிடி போராட்டம்
2வது சுற்றிலும் சிந்துவின் கையே தொடக்கம் முதல் ஓங்கி இருந்தது. இந்த போட்டியிலும் விட்டுக்கொடுக்காமல் ஆடிய இருவரும் புள்ளிகளை குவித்து வந்தனர். ஒருகட்டத்தில் சுதாரித்துக்கொண்ட ஜப்பான் வீராங்கனை யமகுச்சி, ஆக்ரோஷத்துடன் விளையாடினார். இதனால் 2வது செட்டை யார் கைப்பற்றுவார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு எழுந்தது.
கடைசி நேர பரபரப்பு
கடைசி நேரத்தில் சில அற்புதமான ஷாட்களை ஆடிய சிந்து, எதிரணி வீராங்கனையை குழப்பி புள்ளிகளை பெற்றார். இதனால் 2வது செட்டையும் இந்தியாவின் பி.வி.சிந்து 22 - 20 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் காலிறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனையை 21 - 13, 22 - 20 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
உறுதியான பதக்கம்
அரையிறுதி போட்டிக்கு பி.வி. சிந்து தகுதிப் பெற்றுள்ளதால் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியானது. அடுத்த போட்டியில் தோல்வி அடைந்தால் கூட இந்தியாவிற்கு குறைந்தது வெண்கல பதக்கமாவது கிடைக்கும். கடந்த ஒலிம்பிக்கின் போதே பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். எனவே இந்த முறை நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.
வாழ்த்து மழை
மீராபாய் சானு, லோவ்லினாவை தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான 3வது பதக்கத்தை பி.வி.சிந்து உறுதிசெய்துள்ளார். இதனையடுத்து சிந்துவுக்கு சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.