பேட்மிண்டன் போட்டி
பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற 3 தகுதிச்சுற்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இந்த போட்டியில் ஜப்பானின் அகானே யமகாச்சியை எதிர்கொண்டார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிந்து ஆக்ரோஷத்துடன் போட்டிப்போட்டதால் புள்ளிகள் மழை பொழிந்து வந்தது. இதனால் முதல் சுற்றில் 21 - 13 என்ற புள்ளிக்கணக்கில் பி.வி. சிந்து முதல் செட்டை கைப்பற்றினார்.
விடாப்பிடி போராட்டம்
2வது சுற்றிலும் சிந்துவின் கையே தொடக்கம் முதல் ஓங்கி இருந்தது. இந்த போட்டியிலும் விட்டுக்கொடுக்காமல் ஆடிய இருவரும் புள்ளிகளை குவித்து வந்தனர். இதனால் 2வது சுற்றிலும் இந்தியாவின் பதக்க நாயகி பி.வி.சிந்து 22 - 20 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
தவறுகள் நடந்தன
இந்நிலையில் இந்த போட்டிக்கு பின் பேசிய சிந்து, இந்த போட்டியில் மிக நீண்ட போராட்டமாக இருந்தது. 2வது செட் போட்டியில் மிக முக்கியமானதாக இருந்தது. நான் முன்னிலையில் இருந்தேன். ஆனால் அகேனா கம்பேக் கொடுத்தார். அதனால் என்னால் நிம்மதி கூட அடையமுடியவில்லை. எனது தரப்பில் சில தவறுகள் நடந்தன. ஆனால் அதற்கான நான் பதற்றம் அடையவில்லை. அகேனா வெற்றி பெறும் தருவாயில் இருந்தார். அப்போது எனது பயிற்சியாளர் என்னை அழைத்து நம்பிக்கை கொடுத்தார். அதன் காரணாமாகவே அடுத்த புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றேன்.
நேரம் இல்லை
எனக்கு இதில் மகிழ்ச்சி தான், ஆனால் எனது ஆட்டம் இன்னும் முடியவில்லை. என்னைப்பொறுத்தவரை, மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் நேரம் இதுவல்ல, நன்கு ஓய்வெடுத்துவிட்டு அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும். அரையிறுதி சுற்றுக்கு தயாராக வேண்டும் என கூறியுள்ளார்.
உறுதியான பதக்கம்
அரையிறுதி போட்டிக்கு பி.வி. சிந்து தகுதிப் பெற்றுள்ளதால் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியானது. அடுத்த போட்டியில் தோல்வி அடைந்தால் கூட இந்தியாவிற்கு குறைந்தது வெண்கல பதக்கமாவது கிடைக்கும். கடந்த ஒலிம்பிக்கின் போதே பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். எனவே இந்த முறை நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.
வாழ்த்து மழை
மீராபாய் சானு, லோவ்லினாவை தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான 3வது பதக்கத்தை பி.வி.சிந்து உறுதிசெய்துள்ளார். இதனையடுத்து சிந்துவுக்கு சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.