டோக்கியோவில் நடைபெறுகிறது
இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் தொடர் டோக்கியோவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. கொரனோ வைரஸ் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட அல்லது நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பேட்மின்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் வீரர்கள் தயாராகி வருகின்றனர்.
சொதப்பும் பிவி சிந்து
பிசி சிந்துவிற்கு பயிற்சியளித்து வந்த தென்கொரிய பயிற்சியாளர் கிம் ஜி ஹியூன் கடந்த செம்டம்பர் மாதத்தில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், பிவி சிந்து சர்வதேச போட்டிகளில் பின்னடைவை சந்தித்து வருகிறார். பேசிலில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து தங்கம் வெல்ல இவரது பயிற்சியே காரணமாக இருந்தது.
புதிய கோச் நியமனம்
சர்வதேச அளவில் தான் பங்கேற்கும் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாவது சுற்றுகளில் பிவி சிந்து தோல்வியடைந்து வருகிறார். இதையடுத்து இந்திய விளையாட்டு ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு பேட்மின்டன் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சியளிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
பிரபல அணிகளுக்கு பயிற்சி
இந்நிலையில் இந்தோனேசியாவை சேர்ந்த புகழ்மிக்க அகஸ் டுவி சாண்டோசோவை இந்திய பாட்மின்டன் கோச்சாக நியமிக்க இந்திய விளையாட்டு ஆணையமான சாய் முடிவெடுத்துள்ளது. இவர் கடந்த 1998ல் ஆசியாத் ஆண்கள் அணி, 2000ல் சிட்னி ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஹென்ட்ராவன் ஆகியோருக்கு பயிற்சியளித்தவர்.
தென்கொரியாவின் கோச்
மேலும் கடந்த ரியோ ஒலிம்பிக் தொடரில் தென்கொரியாவின் பயிற்சியாளராக இருந்த சாண்டோசோ, ஆண்கள் தனிநபர் பிரிவில் உலக நம்பர் ஒன் வீரராக உள்ள சோன் வான் ஹோவை பயிற்றுவித்தவர். தற்போது தாய்லாந்து அணிக்கு பயிற்சியாளராக இருந்துவரும் சாண்டோசோ, தற்போது இந்திய அணிக்கு பயிற்சியளிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மார்ச் மாதத்தில் பணி
சாய் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாண்டோசோவின் நியமனத்தை டார்கெட் ஒலிம்பிக் போடியம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகமும் இறுதி செய்துள்ளது. மேலும் தலைமை பயிற்சியாளர் கோபிசந்திடமும் ஆலோசனை பெற்றபட்டு சாண்டோசோவின் நியமனம் உறுதியாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் மார்ச் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அவர் பணியில் இணையவுள்ளார்.
மதிப்பிட சாய் முடிவு
இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், பிவி சிந்து, சாய்னா நேவால் மற்றும் ஸ்ரீகாந்திற்கு சாண்டோசோ பயிற்சியளிக்க உள்ள நிலையில், இவரது திறமையை மதிப்பிட்டு தொடர்ந்து இவரது பதவிக்காலத்தை அடுத்த ஒலிம்பிக் வரை நீட்டிக்கவும் சாய் முடிவு செய்துள்ளது. இவருக்கு மாதத்திற்கு 5.7 லட்சம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.