டெல்லி : குத்துச்சண்டை பிரிவில் மீண்டும் அதிக எண்ணிக்கையில் வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப உள்ளது இந்தியா.
2012ஆம் ஆண்டு இந்திய குத்துச்சண்டை சார்பில் எட்டு வீரர்கள் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பப்பட்டனர்.
அதன் பின், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இப்போது வரை எட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த ஆறு ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு முறை இந்தியா 5 வீரர்களுக்கு மேல் அனுப்பவில்லை. 2012 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 8 வீரர்களை பங்கேற்க வைத்தது.
2016 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வெறும் 3 குத்துச்சண்டை வீரர்களை மட்டுமே அனுப்பி வைத்தது. மேரி கோம் உட்பட பல முன்னணி வீரர்கள் அந்த முறை ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறத் தவறினர். இந்த நிலையில், மேரி கோம் மீண்டும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தி உள்ளார்.
எனினும், 2020 ஒலிம்பிக் போட்டிக்கு இதுவரை ஆடவர் பிரிவில் நான்கு பேரும், மகளிர் பிரிவில் நான்கு பேரும் தகுதி பெற்றுள்ளனர்.
மேரி கோம், சிம்ரன்ஜித் கவுர் சிங் ஆகியோர் மகளிர் பிரிவில் தேர்வாகி உள்ள முக்கிய வீராங்கனைகள் ஆவர். ஆடவர் பிரிவில் உலகின் நம்பர் 1 அமித் பங்கால் தகுதி பெற்றுள்ளார்.
இவர்கள் தவிர ஐந்து வீரர்கள் தேர்வாகி உள்ளனர். இன்னும் இரண்டு வீரர்கள் தகுதி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களும் தகுதி பெற்றால் இந்தியா முதன் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு 10 வீரர்களை அனுப்பி வரலாறு படைக்கும்.