மாணவிகள் முன்பு பேச்சு
6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரும் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவருமான குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் லெஜண்ட்ஸ் ஆன் அன்அகாடமி என்ற ஆன்லைன் நிகழ்ச்சியில் 25,000 மாணவிகளுக்கு முன்னிலையில் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் குறித்து உரையாடினார்.
சாதனைகள் குறித்து மகிழ்ச்சி
60 நிமிடங்கள் நீடித்த இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கையில் தான் சந்தித்த சாதனைகள், வேதனைகள் உள்ளிட்டவை குறித்து மேரி கோம் பகிர்ந்து கொண்டார். பல்வேறு தடைகளுக்கு மத்தியில் தான் தன்னுடைய சாதனைகளை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில், அவர்களை உத்வேகப்படுத்தியது.
இலக்கை விட்டுவிடக் கூடாது
குத்துச்சண்டை என்பது ஆண்களுக்கான விளையாட்டு மட்டும் இல்லை என்று மேரி கோம் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார். இதில் அதிகமான பெண்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மேலும் இத்தகைய சாதனை பயணங்களில் பல்வேறு சோதனைகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் எதற்காகவும் எந்த சூழ்நிலையிலும் நம்முடைய இலக்கை விட்டுக் கொடுக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
மனஉறுதி வெற்றிக்கு அவசியம்
முதலில் நம்மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று தெரிவித்த மேரி கோம், யாரோ ஒருவர் அந்த சாதனையை செய்யும் போது ஏன் நம்மால் செய்ய முடியாது என்று நமக்கு நாமே கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் ஒரு விஷயத்தில் ஈடுபடும்போது கவனம், ஒழுக்கம், உறுதி குறிப்பாக மனஉறுதி போன்றவை வெற்றிக்கு மிகவும் முக்கியமானவை என்றும் மேரி கோம் தெரிவித்துள்ளார்.