பரபரப்பை கிளப்பிய மேரி கோம்
போட்டி முடிந்த பின், மரியாதை தெரிவிக்கும் விதமாக அணைக்க வந்த நிகாத் ஜரீனை விலக்கி விட்டார் மேரி கோம். பின்னர், மேரி கோம் செய்தியாளர்கள் சந்திப்பில் கடும் வார்த்தைகளால் நிகாத் பற்றி பேசியதும், பரபரப்பை கிளப்பியது.
வாக்குவாதம்
மறுபுறம், நிகாத் தோல்வி அடைந்த நிலையில், நடுவர் மேரியின் கையை உயர்த்தியபோது, நிகாத் ஜரீனின் தந்தை மற்றும் அவர் சார்ந்த தெலுங்கானா குத்துச்சண்டை அமைப்பினரும் போட்டி முடிவை எதிர்த்து வாக்குவாதம் செய்தனர்.
நிகாத் ஜரீன் திணறினார்
நிகாத் ஜரீன் ஒரே நேரத்தில் மேரி கோம் தன்னை புறக்கணித்த அதிர்ச்சியையும், தன் சார்ந்த நபர்கள் வாக்குவாதம் செய்வதால் வரக்கூடிய பின் விளைவுகளையும் சமாளிக்க முடியாமல் திணறினார். பின்னர் கோபத்தில் இருந்த அவரது தந்தை உட்பட அவரது ஆதரவாளர்களை சமாதானப்படுத்த முயன்றார்.
எங்கே தொடங்கியது?
உலக சாம்பியன்ஷிப் போட்டி தகுதிச் சுற்றுப் போட்டிகளின் போது தான் இந்த பிரச்சனை துவங்கியது. அப்போது நிகாத் ஜரீன் போட்டிக்கு முன் அளித்த பேட்டியில், தன் ஆதர்ச முன்னோடியான மேரி கோமை தான் வீழ்த்துவேன் என கூறி இருந்தார். அது மேரி கோமுக்கு பிடிக்கவில்லை. நிகாத் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாக அவர் கருதினார்.
மோத முடியாது என்ற மேரி கோம்
அதனால், இருவரும் ஒரே எடைப் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் இந்திய அளவிலான ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் அவர்கள் மோத வேண்டிய நிலை வந்தது. மேரி கோம் தன்னால் ஜரீனுடன் மோத முடியாது என கூறினார். அப்படி நடந்தால், அதிக பதக்கம் வென்ற அடிப்படையில் மேரி கோம் நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு செல்வார். நிகாத் ஜரீனுக்கு ஒலிம்பிக் செல்ல தன்னை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகும்.
நினைத்துப் பார்த்ததில்லை
அந்த நிலையில், ஜரீன் இதை எதிர்த்து போராடினார். அதன் முடிவில் தான் இந்த தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது, அதன் முடிவில் பல சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இது குறித்து பேசிய போது "இதெல்லாம் நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை" என்று நிகாத் கூறினார்.
எதிர்பார்க்கவில்லை
மேலும், "இது எனக்கு மிகவும் புதியது. ட்விட்டரில் விளையாட்டு அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியதற்காக அவர் (மேரி கோம்) என் மீது இவ்வளவு கோபப்படுவார் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவர் தனிப்பட்ட முறையில் அனைத்தையும் எடுத்துக் கொண்டால் அது அவருடைய விருப்பம், நான் அதைப் பற்றி கருத்து தெரிவிக்க முடியாது." என்றார்.
எதிராக போராடுகிறேன்
மேலும், "நான் ஒரு நியாயமான தகுதிச் சுற்றுப் போட்டிக்காக போராடிக் கொண்டிருந்தேன். நான் அமைப்புமுறைக்கு எதிராக போராடுகிறேன், மேரி கோம் அல்லது குத்துச்சண்டை கூட்டமைப்புக்கு எதிராக அல்ல. ஒவ்வொரு போட்டிக்கும் முன்பாக முறையான தகுதிச் சுற்றுப் போட்டி இருக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன். அவ்வளவுதான்" என்றார் நிகாத் ஜரீன்.
குழப்பமடைந்த ஜரீன்
போட்டி முடிந்த பின் நடந்த குழப்பத்தை பற்றி அவர் கூறினார். "நான் தோல்வி அடைந்தது வருத்தமாக இருந்தது. நான் என் அதிருப்தியை மறைத்து மற்றவர்களை அமைதிப்படுத்த முயற்சித்தேன். நான் என்னைக் கையாள வேண்டுமா அல்லது அவர்களை கட்டுப்படுத்த வேண்டுமா என்று கூட குழப்பமடைந்தேன்" என்று அவர் கூறினார்.
டிராமா நடப்பதை விரும்பவில்லை
"என் தந்தையும் எனது சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கூச்சலிடுவதை நான் அறிவேன். சிலர் என்னிடம், 'நிகாத், நீ சென்று அவர்களை அமைதிப்படுத்தச் சொல்லுங்கள், இல்லையென்றால் இது பெரிய பிரச்சினையாக மாறும்" என்றார்கள். அதனால், நான் அவர்களை அமைதிப்படுத்த முயற்சித்தேன். அவர்கள் இதைச் செய்வது சரியில்லை என புரிய வைக்க முயன்றேன். மேரிக்காக நிறைய ஆதரவாளர்கள் வந்திருப்பதையும் நான் அறிவேன். அதனால், அங்கே மேலும் டிராமா நடப்பதை நான் விரும்பவில்லை" என்றார் நிகாத் ஜரீன்.