லண்டன் : கொரோனா பாதிப்பு உலகளவில் அச்சுறுத்திவரும் நிலையில், குத்துச்சண்டை தகுதி சுற்றுக்கு அனுமதி வழங்கி அலட்சியமாக செயல்பட்டதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிமீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டி இந்த மாதத்தில் நடத்தப்பட்ட நிலையில், இதில் 40 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் துருக்கியை சேர்ந்த செர்ஹாட் குல்லர் மற்றும் பயிற்சியாளர் சேபுல்லா டம்லுபினார் ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பரவும் நேரத்தில் அந்த பாக். வீரர் செய்த உதவி.. மனம் திறந்து பாராட்டிய ஹர்பஜன் சிங்!
கடந்த டிசம்பர் மாதம் முதலே தன்னுடைய கோர தாண்டவத்தை கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் ஆடிவரும் நிலையில், குத்துச்சண்டை தகுதி சுற்று போட்டிக்கு ஐஓசி அனுமதி அளித்துள்ளதாக துருக்கி பாக்சிங் பெடரேஷன் குற்றம் சாட்டியுள்ளது.
உலகெங்கிலும் கொரோனா தொற்று பாதிப்பிற்கு 21,000க்கு மேற்பட்டோர் உயிழந்துள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் ஏறக்குறைய அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
டோக்கியோவில் வரும் ஜூலை மாதத்தில் துவங்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகளே ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்கு பிறகு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் அறிவித்திருந்தார். ஆனால், லண்டனில் இந்த மாதத்தில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த தகுதிச்சுற்றுப் போட்டிகளில் உலகெங்கிலும் 40 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் துருக்கியை சேர்ந்த 2 வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குத்துச்சண்டை வீரர் செர்ஹாட் குல்லர் மற்றும் பயிற்சியாளர் சேபுல்லா டம்லுபினார் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை தனது வெப்சைட்டில் உறுதிப்படுத்தியுள்ள துருக்கி பாக்சிங் பெடரேஷன், கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கொரோனா பரவல் உள்ள நிலையில், இந்த தகுதிச்சுற்று போட்டிக்கு அனுமதி அளித்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டியுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் வீரர்கள் உடல்நலம் குறித்து ஒலிம்பிக் கமிட்டிக்கு அக்கறையில்லை என்றும் தெரிவித்துள்ளது.
உலக அளவில் அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தகுதிசுற்று லண்டனில் 3 நாட்கள் நடத்தப்பட்டது.