இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 300 பேரை தாண்டி கொரோனா பாதித்து வருகிறது. இந்த நிலையில், அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன.
14 நாட்கள்
குறிப்பாக அவர்கள் 14 நாட்கள் வரை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பின்னரே அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரலாம். இதை தான் மீறி இருக்கிறார் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்.
ஒலிம்பிக் தகுதி
ஜோர்டான் நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதி குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட மேரி கோம் கடந்த மார்ச் 13 அன்று இந்தியா வந்தார். அன்று முதல் 14 நாட்கள் வரை அவர் கொரோனா தாக்கம் காரணமாக அவர் முன்னெச்சரிக்கையாக தனிமையில் இருந்திருக்க வேண்டும்.
ஜனாதிபதி மாளிகை
மாறாக மார்ச் 18 அன்று ஜனாதிபதி மாளிகையில் அளிக்கப்பட்ட காலை விருந்தில் கலந்து கொண்டார் மேரி கோம். அது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட விருந்தாகும். அதில் ராஜ்ய சபா எம்பியாக இருக்கும் மேரி கோம் பங்கேற்றார்.
கொரோனா சிக்கல்
அதே விருந்தில் கொரோனா பாதித்த பாடகி கனிகா கபூருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட துஷ்யந்த் சிங்கும் கலந்து கொண்டார். அதனால், ஜனாதிபதிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டு, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
விதிமுறை மீறல்
இந்த நிலையில், மேரி கோமும் கொரோனா முன்னெச்சரிக்கை நடைமுறையை மீறி உள்ள தகவல் வெளியாகி உள்ளது. மேரி கோமுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் அரசு மக்களுக்கு கூறி வரும் விதிமுறையைத் தான் அவர் மீறி உள்ளார்.
இவரே இப்படி செய்யலாமா?
ஒரு ராஜ்ய சபா உறுப்பினரே, மத்திய அரசு கூறும் முன்னெச்சரிக்கை நடைமுறைகளை பின்பற்றாவிட்டால், சாமானிய மனிதர்கள் அதை பின்பற்றுவார்கள் என எப்படி எதிர்பார்க்க்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முடிந்து விட்டது!?
ஜோர்டான் நாட்டில் இருந்து வந்த பின் தனது தனிமைக் காலம் முடிந்து விட்டதாகவும், ஜனாதிபதி மாளிகை விருந்தில் மட்டுமே தான் கலந்து கொண்டதாகவும், மேலும், 3 - 4 நாட்கள் தான் வீட்டிலேயே இருக்கப் போவதாகவும் மேரி கோம் கூறி உள்ளார்.