டெல்லி: ஒயில்டு கார்ட் வாய்ப்பு மூலம் ஒலிம்பிக்கில், குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பங்கேற்க அனுமதி வாங்கித்தரும் முயற்சியில், இந்திய தரப்பு ஈடுபட்டுள்ளது.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ஏற்கெனவே 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் களமிறங்கியிருந்தார்.
இந்தப் போட்டிதான், அவருக்கு, ஒலிம்பிக் போட்டிக்கான கடைசி தகுதிச்சுற்று போட்டியாகும். இதில் அரையிறுதிக்கு முன்னேறும் பட்சத்தில் மேரி கோம் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெறலாம் என்ற நிலை இருந்தது.
51 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட மேரி கோம் இரண்டாவது சுற்றில் ஜெர்மனி யின் அஸிஸ் நிமானியிடம் 0-2 என தோல்வி அடைந்தார். இத னால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை மேரி கோம் இழந்தார்.
இந்நிலையில், ஒயில்டு கார்ட் வாய்ப்பு மூலம் ஒலிம்பிக்கில் மேரிகோம் பங்கேற்க அனுமதி வாங்கித்தரும் முயற்சியில், இந்திய தரப்பு ஈடுபட்டுள்ளது.
இந்தியாவில் குத்துச்சண்டை போட்டிகளை நடத்திவரும் அட்-கோக் கமிட்டியின் தலைவர் கிஷன் நர்சி இதுகுறித்து கூறுகையில், "மேரி கோம் மிகச்சிறந்த வீராங்கனை. அவரது ஒட்டுமொத்த பங்களிப்பு அபாரம். எனவே அவருக்காக ஒயில்டு கார்ட் கேட்க முடிவு செய்துள்ளோம். இருப்பினும், அதை தருவதா, வேண்டாமா என்பதை மேரி கோம் திறமைகளை ஆய்வு செய்த பிறகு, சர்வதேச குத்துச்சண்டை சங்கம்தான் முடிவு செய்யும் என்றார்.