51 கிலோ எடைப் பிரிவு
குத்துச்சண்டை போட்டிகளில் 51 கிலோ எடைப் பிரிவில் அதிக முறை உலக சாம்பியன்ஷிப் தங்கம் வென்ற மேரி கோம் பங்கேற்று வருகிறார். அதே எடைப் பிரிவில் தெலுங்கானாவின் நிகாத் ஜரீனும் தேசிய அளவிலும், உலக அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார்.
முந்தைய சம்பவம்
ஒரு முறை குத்துச்சண்டை போட்டி ஒன்றில் பங்கேற்கும் முன் தன் ஆதர்ச முன்மாதிரி வீராங்கனையான மேரி கோம்-ஐ தான் வீழ்த்துவேன் என பேட்டி அளித்தார் நிகாத் ஜரீன். அப்போது முதல் நிகாத் ஜரீனின் செயல்பாடுகளை மேரி கோம் விரும்புவதில்லை. அந்தப் போட்டியில் மேரி கோம் எளிதாக வென்றார்.
தகுதிச் சுற்றுப் போட்டிகள்
இந்த நிலையில், 2020 ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு இந்திய அளவில் வீரர், வீராங்கனைகளை தகுதிச் சுற்றுப் போட்டிகள் வைத்து தேர்வு செய்யும் நடைமுறை செயல்படுத்தப்பட்டது. அப்போது மீண்டும் கருத்து வேறுபாடு வெடித்தது.
எனக்கு தேவையில்லை
மேரி கோம் தான் பல பதக்கங்கள் வென்றுள்ள நிலையில், 2019ஆம் ஆண்டும் கூட உலக சாம்பியன்ஷிப் தங்கம் வென்றுள்ள நிலையில் தனக்கு தகுதிச் சுற்றுப் போட்டி தேவையில்லை என்று கூறி நிகாத் ஜரீனை களத்தில் சந்திப்பதை தவிர்க்க முயற்சி செய்தார்.
பெரும் எதிர்பார்ப்பு
எனினும், அதிகாரிகள் மேரி கோமை தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்க சம்மதிக்க வைத்தனர். இத்தனை கலகத்துக்கு பின் இந்தப் போட்டி நடைபெற்றதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
மேரி கோம் வெற்றி
இந்தப் போட்டியின் முடிவில் மேரி கோம் 9 - 1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. போட்டியின் முடிவில் நிகாத் ஜரீன், மேரி கோமை அணைக்க முயன்றார். அப்போது அவரை அருகே வர விடாமல் தள்ளினார் மேரி கோம். பொதுவாக போட்டிக்குப் பின் இருவரும் கை குலுக்கி பிரிவது மரபு. அதையும் தவிர்த்தார் மேரி கோம்.
குற்றச்சாட்டு
முடிவு அறிவிக்கப்பட்ட பின் மேரி கோம் தன்னைப் பார்த்து மோசமான வார்த்தைகளில் திட்டியதாக போட்டிக்குப் பின் குற்றம் சாட்டினார் ஜரீன். மேலும், முதல் இரண்டு சுற்றுகளில் தானே வெற்றி பெற்றதாக தான் கருதுவதாகவும், போட்டி முடிவு தீர்ப்பு பற்றி கூறினார்.
அதிகாரி புகார்
மேரி கோம் பிரபல வீராங்கனை என்பதாலேயே அவர் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறார் என தெலுங்கானா குத்துச்சண்டை அமைப்பின் அதிகாரி ஏபி ரெட்டி புகார் கூறினர்.
இருதரப்பு கருத்துக்கள்
இந்த விவகாரத்தில் இருபிரிவாக கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. சிலர் தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் ஜரீன் தரப்பு இந்த புகார்களை கூறி வருவதாக சிலரும், மேரி கோம் மூத்த வீராங்கனையாக இருந்தும் போட்டிக்கு பின் கை குலுக்காமல் சென்றது தவறு என சிலரும் கூறி வருகின்றனர்.