சாம்பியன்
இந்தியாவின் முக்கிய குத்துச்சண்டை வீரர் மேரி கோம், பெண்கள் உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் 6 முறை பட்டம் வென்றவர். 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் கைப்பற்றி சாதித்தார். 38 வயதாகும் இவர் அடுத்ததாக ஜூலையில் தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 51 கிலோ உடல் எடைப்பிரிவில் பங்கேற்க தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
அறிவிப்பு
இந்நிலையில் டோக்யோ ஒலிம்பிக் போட்டிதான் தனது கடைசி ஒலிம்பிக் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், விளையாட்டில் வயது இங்கு முக்கிய பிரச்சனையாக உள்ளது. எனக்கு இப்போது 38 வயதாகி விட்டது. இதன் பிறகு அடுத்த ஒலிம்பிக்குக்கு மேலும் 4 ஆண்டுகள் என்பது நீண்ட நாட்களாகும். தொடர்ந்து விளையாடி 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் நான் பங்கேற்க விரும்பினாலும் கூட நிச்சயம் என்னை அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவித்தார். ஏனென்றால் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பங்கேற்க அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும்.
சாதனை
20 ஆண்டுகளாக குத்துச்சண்டை விளையாட்டில் இருக்கிறேன். நான் ஒரு ஒலிம்பியன் என்பதில் பெருமைப்படுகிறேன். ஒலிம்பிக்கில் பெண்கள் குத்துச்சண்டை இல்லாததால் வாய்ப்புக்காக நீண்ட காலம் காத்திருந்தேன். இறுதியில் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் பெண்கள் குத்துச்சண்டை பிரிவு சேர்க்கப்பட்டது. ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றது எனது வாழ்க்கையை மாற்றி விட்டது. இந்த வெற்றி இளம் வீராங்கனைகள் குத்துச்சண்டை விளையாட்டை தேர்வு செய்வதற்கு ஒரு தூண்டுதலாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
சோகம்
குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு பல்வேறு பெருமைகளை சேர்த்த மேரி கோம், டோக்யோ ஒலிம்பிற்கு பிறகு இனி ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கமாட்டேன் என தெரிவித்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வரும் டோக்யோ ஒலிம்பிக்கில் அவர் தங்கம் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த ஒலிம்பிக் தொடர் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.