ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்றுள்ள நமீபியா நாட்டு குத்துச் சண்டை வீரர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார்.
நமீபியா நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஜோனாஸ் ஜினியஸ்(22) ஒலிம்பிக் தொடக்க விழாவில் அந்நாட்டின் சார்பில் தேசிய கொடியை ஏந்தி வந்தவர் ஆவார்.
இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பெண்ணிடம் ஜோன்ஸ் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ஜோனாஸ் ஜினியஸை போலீஸார் கைது செய்தனர். இதனால் ஜோனாஸ் ஜினியஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்பதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 11-வது மாடியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு துப்புரவு செய்து கொண்டிருந்த பெண்ணிடம் ஜோனாஸ் ஜினியஸ் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அதாவது அந்த பெண்ணை பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயற்சி செய்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் கிராமத்தில் இதுபோன்ற பாலியல் புகார் சம்பவம் நிகழ்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே இதே குற்றச்சாட்டில் மொராக்கோ குத்துச்சண்டை வீரர் ஹசன் சத்தா கைதாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.