விளையாட்டு வீரர்களின் வலி
ஒலிம்பிக்கில் கலந்துக்கொண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளில் பலர் ஏழ்மையின் பிடியில் சிக்கியிருந்து, அதனை வென்று சாதித்தவர்கள் தான். அவர்கள் தங்களது கஷ்டங்களில் இருந்து மீண்டு உலக அரங்கில் சாதித்திருப்பதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆனால் வெகு சிலருக்கே அதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கிறது. பலரும் வறுமையினால் விளையாட்டு திறனை வெளி உலகிற்கு காட்ட முடியாமலேயே போகின்றனர். அப்படிபட்டவர்களின் ஒருவர் தான் ரித்தூ.
குத்துச்சண்டை வீராங்கனை ரித்து
சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த இளம் குத்துச்சண்டை வீராங்கனை ரித்து. சிறுவயது முதலே குத்துச்சண்டை மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர், பள்ளிப்பருவத்தின் போது போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார். அரசு மகளிர் பள்ளியில் படித்த அவர், உடற்கல்வி ஆசிரியர் பரம்ஜித் சிங் என்பவரால் முதல் முறையாக கடந்த 2015ம் ஆண்டு பள்ளி அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றார். அதில் வெற்றி பெற்ற அவர், அதே வருடம் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
பதக்கங்கள்
ரித்துவின் அசாத்திய திறமையை பார்த்த பரம்ஜித் சிங், அவரை தெலங்கானாவில் நடைபெற்ற பள்ளிகள் அளவிலான தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு அனுப்பி வைத்தார். 63 கிலோ எடைப்பிரிவில் கலந்துக்கொண்ட ரித்து வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். இவரின் குத்துச்சண்டை எதிர்காலம் மேலும் வளர்ந்து தேசத்திற்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2017ம் ஆண்டிலேயே அவரின் குத்துச்சண்டை கனவு முடிவுக்கு வந்தது. அதற்கு காரணம் குடும்ப வறுமை.
குடும்ப வறுமை
ரித்து மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் 3 சகோதரர்களுமே மொஹாலியில் கூலித்தொழிலாளிகளாக உள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு ரித்தூவின் தந்தை உடல்நிலை பாதிப்படைந்ததில் இருந்து தனது படிப்பையும், குத்துச்சண்டை ஆசைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அருகில் உள்ள கார் பார்க்கிங்கில் டோக்கன் வழங்குபவராக பணிபுரிய தொடங்கினார்.
ரூ.350 சம்பளம்
அன்று முதல் இன்று வரை அவரின் வாழ்கை அந்த கார் பார்க்கிங்கிற்கு உள்ளேயே அடைபட்டுள்ளது. தற்போது 23 வயதாகும் ரித்து நாளொன்றுக்கு ரூ.350 என்ற ஊதியத்திற்காக அங்கேயே பணிபுரிந்து வருகிறார். இதுகுறித்து பேசிய அவர், எனது தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டதில் இருந்து குடும்ப வறுமை அதிகரித்தது. அதனால் நானும் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். மிகவும் கடினமாக தான் இருந்தது. ஆனால் இதை தவிர எனக்கும் வேறு வழியில்லை.
மனவேதனை
நான் குத்துச்சண்டை போட்டியில் சிறப்பாக விளையாடியது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. 2017 ல் பள்ளிப்படிப்பை நிறுதியதில் இருந்து எனது விளையாட்டு ஆசைகளும் முடிந்துவிட்டது. எனக்கு சரியான பயிற்சியாளரும், பயிற்சியும் இல்லாத காரணத்தினால் தேசிய குத்துச்சண்டை போட்டிகள், இந்திய குத்துச்சண்டை சமேளத்திற்காக எந்த போட்டிகளிலும் பங்கேற்க முடியவில்லை.
Recommended Video
அரசாங்க பணி
அரசாங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்படும் பணி கூட ரித்துவுக்கு எதுவும் கிடைக்கவில்லை. தேசிய அளவில் பதக்கம் வென்றிருந்த போதும், அவரின் பெயர் அரசுப்பணி பட்டியலில் பரிந்துரைக்கப்படவில்லை. இதுகுறித்து பேசிய அவர், நான் இந்திய ராணுவம் மற்றும் பிகார் மாநில போலிஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளேன். அதற்கான தேர்வுகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். இதற்கு முன்னர் போலீஸ் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தேன். ஆனால் உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்துவிட்டேன் எனக்கூறியுள்ளார்.
ரித்துவின் கோரிக்கை
சிறுவயதிலேயே தேசிய அளவில் பதக்கம் வென்று அசத்திய ரித்துவின் குத்துச்சண்டை கனவு குடும்ப வறுமையினாலும், சரியான ஆதரவு கிடைக்காததாலும், முடிவுக்கு வந்துள்ளது. இதனால் ஒரு சாம்பியனை இந்தியா இழந்திருக்கிறது என்றே கூறலாம். தன்னை போன்று ஏழ்மையில் இருக்கும் திறமையானவர்களுக்கு இலவசமாக பயிற்சிகளை தர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு அரசுப்பணி கொடுக்க வேண்டும் என்பதே ரித்துவின் கோரிக்கையாக உள்ளது.