5 முறை ஆசிய சாம்பியன்
மணிப்பூரை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், 6 முறை உலக சாம்பியன் பட்டத்தையும் 5 முறை ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பையையும் இதுவரை வென்றுள்ளார். மேலும் கடந்த 2012ல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தன்னுடைய பதக்கத்தின் வண்ணத்தை மாற்றி வெற்றி கொள்வதே தன்னுடைய தற்போதைய இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
அதிகரித்துவரும் மேரி கோமின் வலிமை
இந்நிலையில் ஒலிம்பிக் தொடர் தள்ளி போனது மேரி கோம் மேலும் தன்னை வலிமையாக்கிக் கொள்ள உதவியுள்ளதாக அவரது பயிற்சியாளர் சோட் லால் யாதவ் தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக மேரி கோமிற்கு பயிற்சி அளித்துவரும் யாதவ், தற்போது ஆன்லைனில் பயிற்சி அளித்து வருகிறார். வீராங்கனைகளை மேலும் வலிமையாக்கும் பயிற்சிகளை அளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
திட்டத்தை கொடுத்தால் போதும்
தன்னிடம் பயிற்சி மேற்கொண்டுவரும் இளம் வீராங்கனைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள யாதவ், ஆனால் மேரிகோம் விஷயத்தில் அவ்வாறு மெனக்கெட வேண்டியதில்லை என்று வெறும் திட்டத்தை கொடுத்துவிட்டால் மற்றவற்றை அவர் பார்த்துக் கொள்வார் என்றும் கூறியுள்ளார்.
அர்ப்பணிப்புடன் செயல்படுவார்
வயதானாலும் மேரி கோம் இளம் வீராங்கனைகளுக்கு சிறிதும் சளைத்தவரில்லை என்றும், அர்ப்பணிப்புடன் செயல்படுபவர் என்றும் யாதவ்புகழ்ந்துள்ளார். மேலும் இளம் வீராங்கனைகளை விட அவரது வேகம் அசரவைக்கும் திறனுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை வெல்ல அவரது வயது தடையாக இருக்காது என்றும் மேலும் கூறியுள்ளார்.
மேரி கோமின் வேகம் அதிகரிப்பு
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல மேரிகோம் உறுதி பூண்டுள்ளதாகவும், ஒலிம்பிக் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அவரது வேகம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த ஒருவருட இடைவெளி அவரது வலிமையை மேலும் அதிகரித்து டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் பதக்கம் வெல்லும் சாத்தியத்தை அதிகப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.