அம்மான்: ஆசிய ஓசியானியா குத்துச் சண்டை குவாலிபயர் போட்டியின் அரை இறுதிக்குள் இந்தியாவின் பூஜா ராணி நுழைந்துள்ளார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் போட்டியில் ஆடும் தகுதியைப் பெற்று விட்டார்.
ஜப்பானின் டோக்யோவில் இந்த ஆண்டு கோடை கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இதில் முதல் இந்திய குத்துச்சண்டை வீராங்கனையாக பூஜா ராணி தகுதி பெற்றுள்ளார்.
அம்மான் நகரில் நடைபெறும் ஆசியா ஓசியானியா குத்துச் சண்டை குவாலிபயர் போட்டியின் அரை இறுதியில் விளையாட அவர் தகுதி பெற்றுள்ளார். காலிறுதிப் போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் அவர் தாய்லாந்து வீராங்கனை பூர்னிப்பா சுட்டியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
29 வயதாகும் பூஜா ராணி வீழ்த்திய தாய் வீராங்கனைக்கு வயது 18 தான் ஆகிறது. இந்த வெற்றியின் மூலம் அவர் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்று அசத்தியுள்ளார். ராணி அரை இறுதிப் போட்டியில் உலக மற்றும் ஆசிய சாம்பியனான சீனாவின் லீ குவானை சந்திக்கவுள்ளார். லீ குவான் தனது காலிறுதிப் போட்டியில் மங்கோலியாவின் மியாக்மர்ஜார்கலை வீழ்த்தி அரை இறுதிக்குள் வந்துள்ளார்.
பூஜா ராணி 3 முறை ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அதேபோல 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.