தங்கப்பதக்கம்
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் 75 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பூஜாராணி 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் மாவ்லோனோவாவை துவம்சம் செய்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
வெள்ளிப்பதக்கம்
51 கிலோ பிரிவின் இறுதி ஆட்டத்தில் 6 முறை உலக சாம்பியனான இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம், கஜகஸ்தானின் நஸிம் கைஜாபாயை எதிர்கொண்டார். இதில், மேரிகோம் தொடக்கத்தில் இருந்து ஆக்ரோஷமாக விளையாடினர். சில முறை தடுப்பாட்டத்திலும் ஈடுபட்டார். எனினும், இறுதியில் 2-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் மேரிகோம் வெள்ளிப்பதக்கமே வென்றார். இது ஒட்டுமொத்தமாக அவரது ஏழாவது பதக்கமாகும்.
மறக்க முடியாத ஆட்டம்
குத்துச்சண்டை போட்டிகளில் முதன் முறை அறிமுகமான Lalbuatsaihi (64 கிலோ) மற்றும் அனுபமா (81 + கிலோ) ஆகியோரும் இரண்டாம் இடம் பிடித்தனர். அதாவது, வெள்ளிப்பதக்கம் வென்றனர். இதில், Lalbuatsaihi 2-3 என்ற கணக்கில் தோற்றாலும், எதிராணி போட்டியாளரான மிலானா சஃப்ரோனோவாக்கு அவரது வாழ்நாளில் மறக்க முடியாத ஆட்டத்தை கொடுத்துவிட்டார்.
மூன்றரை லட்சம்
முன்னாள் உலக சாம்பியனான கஜகஸ்தானின் லாசாத் குங்கீபாயேவாவுக்கு எதிராக மோதினார் அனுபமா.
இதில், குங்கீபாயேவா 3-2 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றார். தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.7 லட்சமும், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியவர்களுக்கு ரூ.3½ லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது.
அசத்திய மகளிரணி
ஒட்டுமொத்தமாக, இந்திய மகளிர் அணி ஒரு தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றது. பூஜா ராணி(75 கிலோ) தங்கம், மேரி கோம் (51 கிலோ), லால்புட்சாஹி (64 கிலோ), அனுபமா (81 கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர். இந்திய வீராங்கனைகள் சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), லோவ்லினா போர்கோஹெயின் (69 கிலோ), ஜாஸ்மின் (57 கிலோ), சாக்ஸி சவுத்ரி (54 கிலோ), மோனிகா (48 கிலோ), சாவித்ரி (81 கிலோ) ஆகிய வீராங்கனைகள் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.