லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் உலகம் எங்கும் உள்ள 205 நாடுகளை சுமார் 16 ஆயிரம் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவில் இருந்து 81 பேர் பங்கேற்கின்றனர்.
இந்திய குத்துச்சண்டை அணியில் 7 வீரர்கள் மற்றும் 1 வீராங்கனை என்று மொத்தம் 8 பேர் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில் இளம்வீரராக களமிறங்க உள்ள சிவ தபாவின் வயது 18.
இந்த ஆண்டு தனது பள்ளிப் படிப்பை முடித்துள்ள சிவ தபா, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 56 கிலோ பிரிவில் போட்டியிட உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்றில் தங்கப்பதக்கம் பெற்ற இவர், லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் ஒரு குத்துச்சண்டை வீரனாக உருவாக துண்டுதலாக இருந்தவர் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் என்று சிவ தபா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
நான் ஒரு குத்துச்சண்டை வீரனாக உருவாக துண்டுதலாக இருந்தவர் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன். அவரது சிறப்பான ஆட்டத்தை பார்த்து ஆச்சரியமடைந்த நானும், அதேபோல விளையாட வேண்டும் என்று தீர்மானித்தேன்.
இப்போது வெற்றிகளை பெற நான் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் விளையாட வேண்டும் என்ற ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால் அதில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே முக்கியம். ஒலிம்பிக் போட்டியில் விளையாடியவர்கள விட, பதக்கம் வாங்கியவர்கள் தான் மக்களின் நினைவில் இருப்பார்கள்.
எனது குடும்பத்தை பல மாதங்கள் தொடர்ந்து பிரிந்து வாழ்வது வழக்கமாகிவிட்டது. எனது சிறு வயது முதலே குத்துச்சண்டை பயிற்சிக்காக, பெரும்பாலான நேரத்தை புனேயில் உள்ள ராணுவ விளையாட்டு மையத்தில் செலவிட்டேன். தற்போது மூத்தவர்களுக்கான பிரிவில் இணைந்துள்ள நான், பயிற்சிக்காக பட்டியாலாவில் அதிக நேரத்தை செலவிடுகிறேன் என்றார்.