இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம்(29). 5 முறை உலக குத்துச் சண்டை சாம்பியனாகி உள்ள இவர், வரும் 27ம் தேதி துவங்க உள்ள லண்டன் ஒலிம்பி போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்க உள்ளார்.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், டோணி மற்றும் கடந்த 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா ஆகியோர் இந்திய ராணுவத்தின் கெளரவ லெப்டினன்ட் பதவியை வகித்து வருகின்றனர். மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் விமானப் படையின் கெளரவ குரூப் கேப்டன் பதவியை வகித்து வருகிறார்.
இந்த நிலையில் நாட்டின் பாதுகாப்பு துறையின் கெளரவ பதவியை வகிக்கும் 5வது விளையாட்டு நபராக மேரி கோம் இணைக்கிறார். இதன்மூலம் இந்திய ராணுவத்தின் கெளரவ 'லெப்டினன்ட் கர்னல்' பதவி பெறும் முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற உள்ளார் மேரி கோம்.
இது குறித்து மேரி கோம் கூறியதாவது,
இந்திய ராணுவத்தின் கெளரவ பதவி எனக்கு வழங்க உள்ளதாக வெளியான செய்தி உண்மை தான். அதற்கான பணிகள் முடிவடைந்த உடன் இந்திய ராணுவத்தில் இருந்து அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.
லண்டன் ஒலிம்பிக்கில் பெண்கள் குத்துச் சண்டை போட்டியில் குறைந்த எண்ணிக்கையிலான வீராங்கனைகள் தான் பங்கேற்க உள்ளனர். இதனால் முதல் நிலை போட்டியில் வெற்றிப் பெற்றால், காலிறுதிக்கு தகுதிப் பெற்றுவிடலாம்.
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இதனால் ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று ஏதாவது ஒரு பதக்கத்தை கட்டாயம் வென்று விடுவேன் என்று நம்புகிறேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது எனது கனவு.
ஒலிம்பிக் போட்டியை பொறுத்த வரை சீன வீராங்கனை ரின் கேன்கேன், எனக்கு சாவலாக இருப்பார். ஏனெனில் சமீபத்தில் நடைபெற்ற இரு போட்டிகளில் ரி கேன்கேன் என்னை வீழ்த்தியுள்ளார். ஆனால் குத்துச் சண்டையை பொறுத்த வரை, ஆடுகளத்திற்கு இறங்கிவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கும். எனவே அவரை நான் ஒலிம்பிக் போட்டியில் வீழ்த்துவேன் என்று நம்புகிறேன்.
ஒலிம்பிக் போட்டிக்காக நான் புனேயில் பயிற்சி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குத்துச் சண்டையை பொறுத்தவரை, ஆண்களுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதன் மூலம் சிறப்பான பயிற்சியை பெறலாம். எனவே நான் சிறப்பாக பயிற்சியை முடித்து, வரும் 21ம் தேதி லண்டன் புறப்பட்டு செல்ல உள்ளேன். எனது தாய் அல்லது தந்தையை லண்டன் அழைத்து செல்ல உள்ளேன் என்றார்.
முன்னதாக லண்டன் ஒலிம்பிக் செல்ல உள்ள இந்திய வீரர்கள், வீராங்கனைகள், தங்களுடன் ஒரு குடும்ப நபரை இலவசமாக அழைத்து செல்லலாம் என்று இந்திய ஒலிம்பிக் அணியின் விளம்பர நிறுவனம் சாம்சங் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.