அண்டர் 19 உலகக்கோப்பை
அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் தான் முதன் முதலில் அடையாளம் காணப்பட்டார் விராட் கோலி. அந்த அணிக்கு கேப்டனாக இருந்து அசத்தலாக ஆடி இருந்தார். அதனால் கவனம் பெற்ற அவர், இந்திய அணிக்குள் காலடி எடுத்து வைத்தார்.
அறிமுகம் எப்போது
2008ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார் கோலி. அந்தப் போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கினார். வெறும் 12 ரன்களே எடுத்து ஆட்டமிழந்தார். தன் முதல் சதத்தை 2009ஆம் ஆண்டு தான் அடித்தார்.
தடுமாற்றம்
முதல் மூன்று - நான்கு ஆண்டுகள் அவருக்கு அணியில் நிச்சயமாக இடம் கிடைக்கவில்லை. அணிக்குள் வருவதும், போவதுமாக இருந்தார். பல முறை பெஞ்சில் அமர்ந்து வாட்டர் பாய் வேலை தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.
அதிரடி ரன் குவிப்பு
பின் அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். 2014ஆம் ஆண்டில் சில தொடர்களில் மோசமாக ஆடியதால் விமர்சனத்துக்கு உள்ளானார். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக செயல்பட்டார். அதுவே அவருக்கு உந்துதலாக மாறி ரன் மெஷினாக மாற உதவியது. அதன் பின் கோலியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
சாதனை நாயகன்
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் ரன்கள் குவித்து சாதித்து வருகிறார் கோலி. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் 20,000 ரன்களை கடந்தார். 2011 முதல் தற்போது வரை 20,000 ரன்கள் குவித்து பத்து ஆண்டுகளில் எந்த வீரரும் குவிக்காத ரன்களை குவித்துள்ளார்.
எத்தனை ரன்கள்?
239 ஒருநாள் போட்டிகளில் 11,520 ரன்களும், 77 டெஸ்ட் போட்டிகளில் 6,613 ரன்களும், 70 டி20 போட்டிகளில் 2,369 ரன்களும் குவித்து இருக்கிறார் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் 2010ஆம் ஆண்டு தான் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.